Search This Blog n

28 January 2013

வீடியோ கேம்! குடிகாரன் போல ஆகிவிட்டான்தாய்

சாப்பாடு, தூக்கத்தைக்கூட மறந்துவிட்டு தினமும் 16 மணி நேரம் வீடியோ கேமில் மூழ்கிக் கிடந்து அதற்கு அடிமையான மகன் பற்றி அவுஸ்திரேலிய தாய் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலவச ஒன்லைன் வீடியோ கேம்களில் மிகவும் பிரபலமானது ‘ரன் எஸ்கேப்’. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரை சேர்ந்த ஜெகக்ஸ் கேம்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் வடிவமைத்த கேம். கேமில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கும். அதோடு நாமும் ஒரு கேரக்டராக இறங்கி விளையாட வேண்டும். எப்படி விளையாடுவது, விளையாட்டின் நோக்கம் என்ன, எந்த இலக்கை அடைய வேண்டும் என்றெல்லாம் கேமுக்குள் இருக்கும் ஆலோசகர்களிடமே கேட்டுக் கொள்ளலாம். இதுதான் இலக்கு என்று எதுவும் கிடையாது. எதை நோக்கி போவது, என்ன சாதிப்பது என்பது நம் விருப்பம்தான். ஆகமொத்தம், உள்ளுக்குள் ஒரு உலகமே இருக்கும். உலகம் முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோர் ஒன்லைனில் இந்த கேம் ஆடுவதாக கூறப்படுகிறது. மல்டிபிளேயர் ஆன்லைன் கேம் என்ற வரிசையில் ரன்எஸ்கேப், கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது இந்த கேம். அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரை சேர்ந்த சாம் என்ற டீன்ஏஜ் சிறுவனின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. இதுபற்றி அவனது தாய் கரென் கண்ணீருடன் கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன்புகூட சாம் சுறுசுறுப்பான, துடிப்பான சிறுவன்தான். நன்கு படிப்பான். நண்பர்களுடன் டீமாக சேர்ந்து விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். 2010-ம் ஆண்டில் அவனது போக்கு திடீரென மாறியது. பள்ளியில் இருந்து நின்றுவிட்டான். தொழில்நுட்ப கல்வியையும் நிறுத்தினான். நண்பர்கள் என்றால் அவனுக்கு ரொம்ப இஷ்டம். ஆனால், படிப்படியாக நண்பர்களுடன் பேசுவது, விளையாடுவதைக்கூட நிறுத்திவிட்டான். குடும்பத்திலும் அவ்வளவாக ஒட்டுவதில்லை. எந்நேரமும் ரன்எஸ்கேப் கேமிலேயே மூழ்கிக் கிடந்தான். அதாவது, வெளியில் இருக்கும் நிஜ உலகத்தை மறந்து போலியான கிராபிக்ஸ் உலகிலேயே வாழ ஆரம்பித்தான். வீட்டில் நான் திட்டுவேன் என்பதால் இன்டர்நெட் மையத்தில் விளையாடினான். 2 வாரத்துக்கு ரன்எஸ்கேப் கேமுக்காக 400 க்கு மேலான அவுஸ்.டொலர்களை அதிகமாக செலவிட்டான். அவன் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறிப்போயின. சாப்பிடாமல், தூங்காமல், தலைவாராமல், குடிகாரன் போல கம்ப்யூட்டரே கதியென்று கிடந்தான். தினமும் 16 மணி நேரம் கேம் ஆடுவான். ஒருமுறை நொன்-ஸ்டாப்பாக 25 மணி நேரம் ஆடினான். அவனுக்கு ‘ஷிசோபெர்னியா’ என்ற மனநல பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் கூறினர். அவர்களது ஆலோசனைப்படி, வீட்டில் இருந்து முதல் வேலையாக கம்ப்யூட்டரை அகற்றினேன். இது தெரிந்ததும் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டான். திரைச்சீலைகளை கிழித்தான். வயர்களை கத்தரியால் கட் செய்தான். டாக்டர்களின் ஆலோசனையை கேட்டு படிப்படியாக அவனை மாற்றி வருகிறேன். போதை, மது போல வீடியோகேமுக்கு என் மகன் அடிமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டாக்டர்கள் சொன்னது போல, வீட்டின் ஹாலில் கம்ப்யூட்டரை வைத்திருக்கிறேன். குறிப்பிட்ட நேரம்தான் ஆடவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன். சில நேரங்களில் மட்டுமே இன்டர்நெட் பயன்படுத்துமாறு லாக் பொருத்தி இருக்கிறேன். இப்போதெல்லாம் வேளாவேளைக்கு சாப்பிட்டு, போதிய நேரம் தூங்கிவிட்டு பிறகுதான் விளையாடுகிறான். மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுபோல உலகமெங்கும் பல சிறுவர்கள், இளைஞர்கள் வீடியோகேமுக்கும் இன்டர்நெட் கேமுக்கும் அடிமையாகி வருகிறார்கள். அவர்களது பெற்றோர் ஆரம்பத்திலேயே உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு தாயார் கரென் கூறியுள்ளார்

1 கருத்துகள்: