Search This Blog n

20 March 2013

போர்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும்: மாணவர்களின்

போர்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும்: மாணவர்களின்
இலங்கை விவகாரத்தை முன்வைத்து நாளுக்கு நாள் தமிழகத்தில் வலுத்து வரும் மாணவர்கள் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
மாணவர்களுடன் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், இலங்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதேபோல தருமபுரி அரசு கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் இன்று 6வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.
கோவையில் அரசு கலை மற்றும் சட்டகல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 10வது நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று 9வது நாளை எட்டியுள்ளது. புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 50 பேர் இன்று 3வது நாளாக தங்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.
நெல்லையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மாணவர்களின் போராட்டம் 9வது நாளை எட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி மாணவர்களும் இணைந்து தொடர் முழக்கப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மாணவர்கள் உண்ணாவிரதம் மட்டுமின்றி, பல்வேறு வகையான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி மாணவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தனியார் பொறியில் கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகர்கோயில் மாவட்டத்தில் பொறியியல் மாணவர்கள், தொழிற் பயிற்சி பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இலங்கைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், இலங்கைக்கு எதிராகவும் பொதுமக்கள், சட்டத்தரனிகள், வணிகர்கள் என சகல தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு சட்டத்தரனிகள் இன்று போராட்டம் நடத்துகின்றனர். இதேபோல தமிழ் அமைப்புகள் சார்பில் ரயில் மறியல் போராட்டமும் இன்று நடைபெறுகிறது

0 கருத்துகள்:

Post a Comment