Search This Blog n

30 September 2014

சசிகலாவையும் தன்னுடன் சிறையில்இருக்க அனுமதி கோரி ஜெயலலிதா மனு!-

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, தன்னுடைய தோழி சசிகலாவை தன்னுடன் இருக்க அனுமதி கோரி சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 4வது நாளாகா சிறையில் உள்ள அவர்களை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் அ.தி. மு.க.வின் சட்டப்பிரிவு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
சிறையில் உள்ள ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அவதிப்படுகிறார். நீரிழிவு நோய், இதயக்கோளாறு, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 5.30 மணிக்கு எழுந்த ஜெயலலிதா, பால் சாப்பிட்டுவிட்டு, சிறிது நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அதன்பிறகு பொங்கலும், சர்க்கரை சேர்க்காத பாலும் சாப்பிட்டுள்ளார். வழக்கத்தைவிட ஜெயலலிதா இன்று மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டதாக சிறையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தன்னுடைய தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரை தன்னுடைய அறையில் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி சிறைத்துறை அதிகாரிகளிடம் ஜெயலலிதா மனு அளித்துள்ளதாக பரப்பன அக்ரஹாரா சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வழக்கில் தண்டனை பெற்றுள்ள சுதாகரன், சுரங்க ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜனார்த்தன ரெட்டியின் முன்னாள் உதவியாளர் மெஃப்சுல் அலி கானுடன் ஒரே சிறை அறையை பகிர்ந்துகொண்டுள்ள நிலையிலேயே, ஜெயலலிதா இந்த மனுவை கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, சிறையில் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. சுகன்தீப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் தாமதம்; மனு விசாரணை அக்.6 க்கு ஒத்திவைப்பு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதால், அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜாமீன் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு  தாக்கல் செய்திருந்தனர்.
ஜெயலலிதா தரப்பில், சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும், சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
வழக்கில் தண்டனை விதிக் கப்பட்டு இருக்கும் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்மைச்சராக இருந்தவர். ‘இசட்’ பிரிவு பாதுகாப்புடன் மிகமிக முக்கிய பிரமுகர் அந்தஸ்தில் இருப்பவர். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்தார்.
எனவே அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். பெங்களூரில் உள்ள சூழ்நிலைகள் அவரது உடல் நிலைக்கு ஒவ்வாது என்பதால், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.
ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க மாட்டார். நாட்டை விட்டும் வெளியேற மாட்டார்” என 15 பக்கங்கள் கொண்ட அந்த மனுவில் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல், இந்த வழக்கில் தண்டனை பெற்று உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பிலும் ஜாமீன் கோருவது உள்பட தலா 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில் ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுஇ விடுமுறைகால நீதிபதி ரத்னகலா முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்கள் அரசு தரப்பிற்கு தரவில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்துஇ ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையின் போது, அவரது சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடுகிறார். இதற்காக நேற்று அவர் அவசரமாக பெங்களூர் வந்தார்.அங்கு அவர் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சசிகலாவுக் காக பிரபல மும்பை வழக்கறிஞர் அமீத்தேசாய்  ஆஜராகி வாதாடுவார் என தெரிகிறது..அதேபோல சுதாகரனுக்காக அன்புக்கரசன் என்ற வழக்கறிஞர் வாதாடவுள்ளதாக கூறப்படுகிறது. இளவரசிக்கான வழக்கறிஞர் யார் என்பது தெரியவில்லை.
ஜாமீன் மனு விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வாதிடுகிறார்.
இதுகுறித்து பவானி சிங் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜராகி வாதாடினேன். இந்த வழக்கில் சாட்சிகள் பலமாக இருந்ததால் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தது.   தீர்ப்பு முழு விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை.
அது மொத்தம் 1,136 பக்கங்களை கொண்டுள்ளது. தீர்ப்பு நகல் வழங்குமாறு கேட்டு விண்ணப்பித்து உள்ளேன். அது கிடைத்ததும் தீர்ப்பை முழுவதுமாக படிப்பேன். ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக அறிந்தேன். அது பற்றி எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை. ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். தீர்ப்பு நகல் கிடைத்த பிறகு அதை முழுவதுமாக படித்த பிறகே நீதிமன்றத்தி்ல் எனது கருத்தை தெரிவிப்பேன். தீர்ப்பை படிக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும்” என்றார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment