Pages

31 October 2013

இலங்கை மீனவர்கள் 24 பேர் இராமநாதபுரம் நீதிமன்றில்



இந்தியாவில் கைது செய்யப்பட்ட 24 இலங்கை மீனவர்களும் இன்று தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு இராமநாதபுரம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 24 பேர் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி கடற்பரப்பில் தென்பகுதியில் 18 கடல் மைல் தொலைவில் 4 படகுகளில் 24 இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதுபற்றிய தகவல் கடலோர காவல்படைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடந்து 24 இலங்கை மீனவர்களையும் கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
 

30 October 2013

தீபாவளி போனசாக வெற்றுக் கவரை கொடுத்த அமைச்சர்?


உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீபாவளி போனசாக தங்களுக்கு பணம் இல்லாத வெற்று கவரை கொடுத்ததாக அதிமுக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

தமிழகம் முழுவதுமுள்ள இரண்டாம் கட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி போனஸ் கொடுக்கச்சொல்லி ஆளும் தரப்பு உத்தரவிட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் டெண்டருக்கான நிதி ஒதுக்கி, அதிலிருந்து வரும் கமிஷனை தரவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டு கமிஷனை வாங்கிய அமைச்சர் காமராஜ் அந்த பணத்தை கட்சி நிர்வாகிகளுக்கு கொடுக்க மனமில்லாமல் ஒவ்வொரு ஒன்றிய நிர்வாகியிடமும் முன்னூறு வெற்று கவர்களை கொடுத்து விட்டு வரச்சொல்லியுள்ளார்.

கவர் வந்த விபரம் மற்ற நிர்வாகிகளுக்கு தெரிந்ததும் ஒன்றிய நிர்வாகிகளை மொய்க்க தொடங்கி விட்டார்கள். ஒன்றிய நிர்வாகிகளோ விழி பிதுங்கி பதில் சொல்ல முடியாமல் அமைச்சரை தொடர்பு கொண்டு விபரத்தை சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் இன்னும் ஒரு மாதத்திற்குள் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஊரக சாலை போடும் திட்டத்திற்கான டெண்டர் வரவிருக்கிறது. அந்த டெண்டரை எடுக்க இப்போதே காண்ட்ராக்டர்களை தேடிப்பிடித்து அவர்களிடம் கமிஷனை முன்பணமாக பெற்று மற்ற நிர்வாகிகளுக்கு கொடுக்குமாறு சொல்லியுள்ளார்.

இந்த பதிலை கேட்ட ஒன்றிய நிர்வாகி, எப்போதோ வரவிருக்கும் டெண்டருக்கு இப்போதே காண்ட்ராக்டர்களை தேடிப்பிடித்திருக்கிறார்கள் என்ற அவர்களிடம் காலில் விழாத குறையாக முன்பணம் வாங்கி அதை அமைச்சர் கொடுத்த வெறும் கவரில் வைத்து தீபாவளி போனசாக நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளார்.

இப்படி போனசுக்காக அலைக்கழிக்கப்பட்ட நிர்வாகி ஒருவர் கூறுகையில், இதுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை மூலமாக 78 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டார்கள், அதுல வந்த கமிஷன்ல இருந்தாவது எங்களுக்கு அள்ளி கொடுக்காவிட்டாலும், கிள்ளி குடுத்துருக்கலாம்.

அதையும் தராம இப்ப நிர்வாகிகளுக்காக விடப்பட்ட டெண்டர் மூலமா வந்த பணத்துலயும் போனஸ் கொடுக்காம, எப்பவோ வரப்போற டெண்டருக்கு இப்ப பணம் வாங்கி தரச்சொல்லியிருக்காரு என்றும் அவரு மட்டும் நோகாம தீபாவளி கொண்டாடனும், கட்சிக்காக ஓடி, ஓடி உழைச்சி ஓடா தேய்ஞ்ச நாங்க வெறும் கவரை வாங்கனுமா என புலம்பியுள்ளார்.
 

தீபாவளி வாழ்த்துக்களோடு மீண்டும் சிறைக்கு சென்ற சஞ்சய் தத்


மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளியே வந்திருந்த நடிகர் சஞ்சய் தத், பரோல் காலம் முடிந்து இன்று காலை புனேயில் உள்ள ஏரவாடா சிறைக்கு திரும்பியுள்ளார்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், சட்டத்துக்கு விரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் நடிகர் சஞ்சய் தத்.

இந்நிலையில் இவர் தனது காலில் வலி எனக் கூறி மருத்துவசிகிச்சைக்காக கடந்த 1ம் திகதி பரோலில். 14ம் திகதியுடன் பரோல் முடியவிருந்த நிலையில், நீதிமன்றத்தை அணுகி மேலும் 15 நாட்களுக்கு பரோலை நீட்டித்தார்.
இந்நிலையில் நேற்றோடு பரோல் காலம் முடிந்ததால், இன்று காலை 6.30 மணியளவில் அவரது வீட்டில் இருந்து சஞ்சய் தத் புறப்பட்டு மீண்டும் புனே சிறைக்குச் சென்றார்.

வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் தத், இன்னும் கால்களில் வலி உள்ளது. முழுவதுமாக குணமடையவில்லை, நான் விரைவில் விடுதலையாக பிரார்த்திக் கொள்ளுங்கள் என்றும் அனைவரும் அளித்த ஆதரவுக்கு நன்றி, அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார்.
 

29 October 2013

இரவில் விபச்சார விடுதி பகலில் கல்லூரி, ! இது நாக்பூர்!!!


 நாக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள், பகலில் கல்லூரிப் பெண்கள் போலவும், ராத்திரியானால் விபச்சாரத்திலும் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வாடி, ஹிங்கனா, கல்மேஸ்வர், கம்ப்டீ உள்ளிட்ட நாக்பூரைச் சுற்றியுள்ள சிறிய ஊர்கள், கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள் நாக்பூரில் கல்லூரியில் படிக்க வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்களில் கல்லூரி முடிந்ததும் இரவில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனராம்.
அதேபோல பல இளம் பெண்கள் வேலை பார்ப்பதாக கூறி நாக்பூரில் வந்து தங்கி அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது படிப்புச் செலவு, குடும்பச் செலவுக்காக விபச்சாரத்தில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். ஆனால் பலர் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்த விபச்சாரத்தை நாடுவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து நாக்பூரைச் சேர்ந்த வர்ஷா பாக்ளே என்ற சமூக சேவகி கூறுகையில், பல இளம் பெண்கள் தொலை தூரத்திலிருந்து

 வந்து நாக்பூரில் தங்குகின்றனர். படிக்கவும், வேலை பார்க்கவும் வரும் இவர்கள் தங்களது குடும்பத்தைக் காக்கவும், தங்களது செலவுகளுக்காகவும் இரட்டை வாழ்க்கை நடத்துகின்றனர்.

இவர்களுக்கு 18 முதல் 25 வயதுக்குள்தான் உள்ளது. அதேசமயம், இவர்கள் அனைவரும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறி விட முடியாது.

இதில் நல்ல வசதி படைத்த பெண்களும் உள்ளனர் என்றும் இவர்கள் ஆடம்பரமான வாழ்க்கைக்காகவும், ஜாலிக்காகவும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

மேலும் விபச்சாரத்தில் ஈடுபடும் பல இளம் பெண்கள் கலை, அறிவியல், வணிகப் படிப்புகளைப் படித்து வருபவர்கள் ஆவர். இந்தப் பெண்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகமாக இருக்கிறது. கை நிறையப் பணத்தைப் பார்த்து விரும்பியே இந்த தொழிலுக்கு வருகின்றனர்.
பலர் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெறுகின்றனர். சிலர் புரோக்கர்கள் மூலமாக பணத்தைப் பெறுகின்றனர்.

மேலும் இந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் ஏகப்பட்ட சிம் கார்டுகளை வைத்துள்ளனர். குறைந்தது 5 முதல் 6 சிம் கார்டுகளை இவர்கள் வைத்துள்ளனர், தங்களுக்குப் பிடித்த வாடிக்கையாளர்களிடம் எண்களையும் கொடுத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் ஒரு இரவுக்கு குறைந்தது 6000 வசூலிக்கின்றனர். சிலர் ரூ. 10,000 வரை கூட சம்பாதிக்கின்றனர். சில பெண்கள் மணிக்கணக்கிலும் ரேட் பேசி வருகின்றனர். அதாவது ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1500 முதல் 2000 வரை இவர்கள் வசூலிக்கின்றனர்.

பல பெண்கள் இந்தப் பணத்தை வைத்து ஆடம்பரமாக செலவிடுகிறார்கள். விலைமதிப்பான கைப்பேசிகள் வாங்குகிறார்கள். மேக்கப் சாதனங்களை வாங்கிக் குவிக்கிறார்கள் மற்றும் விதம் விதமான ஆடைகளை வாங்கிப் போட்டுக் கொள்கின்றனர்.

நாக்பூரில் தொழில்முறை செக்ஸ் தொழிலாளர்கள் 300 பேர் உள்ளனர், இவர்களில் முக்கால்வாசிப் பேர் மாணவிகளே என்று தெரிவித்துள்ளார்.
 

கொமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளலாமா? விவசாயி தீக்குளிப்பு


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்லப்போவதாக வந்த அறிவிப்பினை அடுத்து விவசாயி ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் (43). இன்று காலை திடீரென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.
அப்போது அவர் இலங்கைக்கு இந்தியாவின் சார்பில் யாரும் செல்லக் கூடாது என்றும் கிருஷ்ணகிரி கே.ஆர் அணையில் இருந்து திண்டல் வழியாக வரும் பாசனக் கால்வாயினை அரூர் வரை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பணியில் இருந்த பொலிசார் அவரைத்தடுத்து உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

இந்தியாவில் தேடப்படும் பயங்கர பெண் குற்றவாளிகள்


 இந்தியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளிகளில் ஏராளமான பெண்களும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு தலைமறைவாகி உள்ளனர்.
இந்தப் பெண் குற்றவாளிகள் பல ஆண்டுகளாக பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்து வருகின்றனர். இத் தலைமறைவு குற்றவாளிகளின் முகவரிகள் இதோ.
நிழல் உலக தாதா டைகர் மேனனின் மனைவி ரேஷ்மா மேனன். 1993ம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முதன்மை குற்றவாளிகளில் ஒருவர் ரேஷ்மா மேனன்.
டைகர் மேனனின் பயங்கரவாத செயல்களில் துணை நின்ற இவருக்கு எதிராக இண்டர்போல் உதவியுடன் ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. அத்துடன் இவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு ரூ25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று மும்பை பொலிசார் அறிவித்துள்ளனர்.
இந்தியாவைவிட்டு வெளியேறிய ரேஷ்மா துபாயில் முதலில் தஞ்சமடைந்தார். பின்னர் பாகிஸ்தானின் கராச்சி இடம்பெயர்ந்ததாக நம்பப்படுகிறது.
அடுத்ததாக நிழல் உலக தாதாக்களில் ஒருவரான அயூப் மேனனின் மனைவிதான் ஷபானா மேனன். இவர் மீதும் 1993ம் ஆண்டு மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அயூப் மேனன், அவரது மனைவி ஷபானா மேனன் ஆகியோர் தாவூத் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்கள். இவரும் முதலில் துபாய்க்கு தப்பியோடி பின்னர் பாகிஸ்தானின் கராச்சியில் தஞ்சமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இவருக்கு எதிராகவும் ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. இவரைப் பற்றிய தகவல் தருவோருக்கும் ரூ25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று மும்பை பொலிசார் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் தேடப்படும் மிக முக்கிய பெண் குற்றவாளிகளில் முக்கியமானவர் ஷோபனா ஐயர். இவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரைப் பற்றிய தகவல் தருவோர் அல்லது பிடித்து கொடுப்போருக்கு ரூ10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் நிழல் உலக தாதா அபு சலீமின் முன்னாள் மனைவி. 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அபு சலீம் பற்றிய ஏராளமான தகவல்களை அறிந்தவர் என்பதால் அவர் தேடப்பட்டு வருகிறார்.
அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. அனேகமாக அவர் அமெரிக்காவில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் இந்தியாவால் தேடப்படுகிற முக்கிய பெண் குற்றவாளிகளில் அஞ்சலி மகானும் ஒருவர். அவருக்கு எதிராகவும் ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிழல் உலக தாதா பப்லு ஸ்ரீவத்ஸ்வாவின் மிக நெருங்கிய நண்பர்தான் அர்ச்சனா பல்முகுந்த். வட இந்தியாவில் பல்வேறு கடத்தல் மற்றும் பணம் பறிப்பு சம்பவங்களில் இவருக்கு நேரடி தொடர்பு உள்ளது.
ஜாமீனில் வெளியே வந்தவர் அப்படியே தலைமறைவாகிவிட்டார். மணீஷா அகர்வால், மீனாக்ஷி அகுஜா, அர்ச்சனா என்ற போலி பெயர்களில் வலம் வரும் இவரை புனே பொலிசார் தேடி வருகின்றனர்.
கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் மோனிகா. 2001ம் ஆண்டு ரூ60 லட்சம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் சிக்கியவர். மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் இருந்தபடியே குழந்தையைப் பெற்ற இவருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் கொடுக்கப்பட்டது.
ஆனால் ஜாமீனில் வெளியே வந்தவர் பொலிசிற்கு தண்ணி காட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இவர் இன்னமும் பொலிசாரால் தேடப்பட்டு வருகிறார்.

 

27 October 2013

என் தலைவர் பிரபாகரனையே கொன்று விட்டனர்: விஜயகாந்த்!



என் தலைவன் பிரபாகரனையே கொன்று விட்டனர் இனிமேல் கொமன்வெல்த் மாநாட்டில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை பேசி என்ன நடக்கப் போகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரபரப்பாக பேசியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று விஜயகாந்த்தை செய்தியாளர்கள் சந்தித்துள்ளனர்.

அப்போது இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் விஜயகாந்த்.
கேள்வி: கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே?
பதில்: நான் என்ன சொல்ல வேண்டும். கனடா

 கலந்து கொள்ளாது, ஆனால் அந்நாட்டு பிரதிநிதி பங்கேற்பார் என்றும் இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடுமைக்கான எதிர்ப்பை பதிவு செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது பேசி என்ன நடக்கப்போகிறது? என் தலைவன் பிரபாகரனையே கொன்றுவிட்டனர், இனிமேல் பேசி என்ன ஆகப்போகிறது?
கேள்வி: மாநகர மினி பேருந்துகளில் இரட்டை இலை படம் வரையப்பட்டுள்ளதே?
பதில்: நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். ஜனநாயகத்தின் நான்காவது தூண் நீங்கள்தான்.
கேள்வி: தமிழகம் விரைவில் மின்மிகை மாநிலமாக மாற்றப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளாரே?

பதில்: அதை பொறுத்து இருந்துதான் பார்க்கணும். இப்பதான் அடுப்புல சோற்றை வைத்து இருக்கிறார், அது வெந்ததா? குலையுதா? என்பது மெதுவாகத்தான் தெரியும்.
$
மேலும் இப்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது என்றும் அது முடிந்த பிறகுதான் எல்லாம் தெரியும் எனவும் கூறியுள்ளார்.
 

26 October 2013

இந்தியாவில் தயாராகும் சுவிஸ் சாக்லேட்டுகள்


சுவிட்சர்லாந்து நாட்டுச் சாக்லேட்டுகள் இனிப்பு வகைகளுக்கும், துணிமணிகள் வர்த்தகத்திற்கும் பெயர்பெற்ற இந்தியாவின் சூரத் நகரில் தற்போது  தயாரிக்கப்பட உள்ளன.

சூரத் நகரில் 2,000 கோடி மதிப்பீடு பெறும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ரஜ்ஹன்ஸ் குழுமம் தற்போது சாக்லேட் வர்த்தகத்துறையில் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் முன்னணியில் உள்ள சாக்லேட் நிறுவனம் ஒன்றுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக இந்தக் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் ஜெயேஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.
இதற்கான தொழிற்சாலை ரூ. 500 கோடி மதிப்பீட்டில் 1.5 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் கிம் என்ற பகுதியில் அமைக்கப்பட உள்ளது.

இந்தத் தொழிற்சாலைக்கான இயந்திரங்களும் அதன் தொழில்நுட்பங்களும் இங்கிலாந்து, டென்மார்க், ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட உள்ளன.

காட்பரி மற்றும் நெஸ்லேக்குப் பின்னர் இந்தியாவில் சாக்லேட் தொழிற்துறையில் அமையவிருக்கும் மூன்றாவது பெரிய நிறுவனமான இது குஜராத்தில் இந்த வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முதல் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையைப் பெறுகின்றது.
காட்பரிஸ் நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட நிர்வாகிகள் தற்போது ரஜ்ஹான்ஸ் குழுமத்தினரால் தங்களின் புதிய தொழிற்சாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரும் ஜனவரியில் விற்பனைக்கு வரும் இந்த சாக்லேட் அச்சுகள் ஸ்மிட்டன் என்ற பெயரிலும், சாக்லேட் பார்கள் ஹோப்பிட்ஸ் என்ற பெயரிலும் விற்பனைக்கு வரும். 25 டன்னுக்குக் குறையாமல் உற்பத்தி இங்கு நடைபெறும் என்று ரஜ்ஹான்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ரூ. 4,000 கோடி வர்த்தகத்தில் உள்ள இந்திய சாக்லேட் சந்தை வரும் 2015க்குள் ரூ. 7,500 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 70 சதவிகித வர்த்தகத்தை காட்பரிஸ் நிறுவனம் தன்னுடைய பிடியில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

பல இலட்சம் ரூபா பணத்தை உரியவர்களிடம் ஒப்படைந்த இந்தியர்


 
அவுஸ்திரேலியாவில் பயணி ஒருவர் தவறவிட்ட 65 லட்சம் ரூபா பணத்தை இந்திய டாக்சி சாரதி பத்திரமாக ஒப்படைத்து உள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வாகன கார் ஓட்டுநராக இருப்பவர் லக்விந்தர் சிங் தில்லான்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மெல்போர்ன் நகரில் பலர் இவரது வாடகை காரில் பயணம் செய்தனர்.
ஓய்வு நேரத்தின் போது, பின்புற சீட்டை தற்செயலாக பார்த்த தில்லான், அங்கு பை ஒன்றை கண்டார். அதை திறந்து பார்த்த போது கட்டுகட்டாக பணம் இருந்தது.

அன்றைய தினம் பலர், தனது காரில் பயணம் செய்ததால், அந்த பை யாருடையது என்பதில் இவருக்கு, குழப்பம் ஏற்பட்டது.
எனினும் பணத்தினை தவறவிட்ட பயணி டாக்சி நிறுவனத்தினை தொடர்பு கொண்டு பணம் காணாமல் போன விடயத்தை தெரிவித்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த தில்லான், ''என்னிடம் பணம் பத்திரமாக உள்ளது. வந்து பெற்று கொள்ளுங்கள்'' என, கூறினார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பயணியிடம், பையில் இருந்த 65 லட்சம் ரூபாய் பணம் ஒப்படைக்கப்பட்டது.
 

டெல்லியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாபெரும் போராட்டம்!


 ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதற்கு இந்தியா எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.அதையும் மீறி இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் அதில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது

என மத்திய அரசை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) சார்பில் டெல்லியில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற உள்ளது
நாள்: 28 அக்டோபர் 2013
நேரம்: காலை 11 மணி அளவில்
இடம் : ஜந்தர் மந்தர் புது தில்லி
தலைமை- ஏ.ஸயீத் (தேசிய தலைவர் எஸ்.டி.பி.ஐ)
குறிப்பு

இப்போராட்டத்தில் தமிழக தலைவர்கள் தெஹ்லான் பாகவி நெல்லை முபாரக் முகவை அப்துல் ஹமீதுஇநிஜாம் முஹைதீன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

அன்பார்ந்த உறவுகளே!
ஈழத் தமிழர்களுக்காக டெல்லியிலே மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக போராடுகின்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் இப்போராட்டத்துக்கு ஆதரவு தாரீர்

பேஸ்புக் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது:


மாணவி தற்கொலை மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவரை அவரது பெற்றோர் கைப்பேசி மற்றும் பேஸ்புக் பயன்படுத்தியதற்காக கண்டித்ததால் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள பர்பானியை சேர்ந்த சுனில், தஹிவாமகள் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்.

இவர்களில் 17 வயதாகும் மகள் ஐஸ்வர்யா கல்லூரியில் படித்து வந்தார். இவர் அதிக நேரம் கைப்பேசி மற்றும் பேஸ்புக் பயன்படுத்துவதை கண்டு கவலை அடைந்த அவரது பெற்றோர் இத்தகைய வலைத்தளங்களையும், கைப்பேசியையும் வைத்துக்கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பழக்கத்தை நிறுத்தும்படி கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு ஐஸ்வர்யா பேஸ்புக்கில் நிறைய நேரம் செலவழிப்பதை கண்ட பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் கோபமடைந்த ஐஸ்வர்யா தன்னுடைய பெற்றோர் தன்னை இதுபோல் அடிக்கடி தடுப்பதாகவும், இத்தனை கட்டுப்பாடுகளுடன்

தன்னால் இருக்கமுடியாது என்றும் பேஸ்புக் இல்லாமல் தன்னால் வாழவே முடியாது எனவும் கடிதத்தில் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவத்தால் ஐஸ்வர்யாவின் குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு பச்சை கொடி காட்டுகிறதா அதிமுக?


 காங்கிரஸ் கட்சியினர் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் காங்கிரஸ் நிர்வாகிகள் அதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

தேர்தல் களத்தில் திமுகவினர் காலைவாரிவிடவே வாய்ப்பு இருக்கிறது என்பது காங்கிரசாரின் கருத்து. இதைத்தான் அதிமுக ஆதரவு காங்கிரசார் பலரும் மேலிடத்துக்கும் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் அதிமுக தரப்பிலும் ஜெயலலிதா மீதான பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்க காங்கிரஸ் மேலிடத்தை தொடர்பு கொள்ளும் படலங்களும் அரங்கேறி இருக்கின்றன.

காங்கிரஸ் மூத்த தலைவர் மார்க்ரெட் ஆல்வா மூலமாக இத்தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறதாம்.
அதிமுகவின் எதிரியாக கருதப்படும் ப.சிதம்பரம்தான் இப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மும்முரம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

ப.சிதம்பரத்தின் பரிந்துரையில் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டவர் ரோசய்யா. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனும் இணக்கமான போக்கை கொண்டிருப்பவர் ரோசய்யா. எதிரிகளாக இருக்கும்

ப.சிதம்பரத்தையும் ,ஜெயலலிதாவையும் ரோசய்யா தமது தனிப்பட்ட கைப்பேசியில் பேசவைத்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் அதிமுகவைப் பொறுத்தவரையில் தேர்தலுக்குப் பின்னர்தான் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உறுதியாக இருப்போம் என்பது கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் ஜெயலலிதா இப்படியெல்லாம் செய்யக் கூடியவர் என்பதால் தேர்தலின்போதே கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பதில் கறாராக இருக்கிறது காங்கிரஸ்.
 

25 October 2013

மரணமடைந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.6 கோடி


டெல்லி மருத்துவமனையில் தவறான சிகிச்சையினால் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ.6 கோடி நஷ்டஈடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள அட்வான்ஸ்ட் மெடிகேர் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாடு வாழ் பெண் மருத்துவர் மருத்துவமனையின் கவனக்குறைவால் மரணம் அடைந்தார்.
அமெரிக்காவில் வசித்து வந்த குழந்தைகள் நல மருத்துவரான அனுராதா சாஹா. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அவரது கணவர் மருத்துவர் குணால் சாஹா.
இவர்கள் கடந்த 1998ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தாவுக்கு வந்தனர். ஏப்ரல் 25ம் திகதி இவருக்கு சரும அலர்ஜி ஏற்படவே அவர் மருத்துவர் சுகுமார் முகர்ஜியை பார்த்துள்ளார்.
அவரோ மருந்து எதுவும் எழுதிக் கொடுக்காமல் ஓய்வு எடுக்குமாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில் மே மாதம் 7ம் திகதி அனுராதாவுக்கு சரும பிரச்சனை அதிகரித்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவர் முகர்ஜி அவருக்கு டெபோமெட்ரோல் ஊசியை பரிந்துரைத்துள்ளார். தினமும் இரண்டு வேளை தலா 80 மில்லிகிராம் அளவில் ஊசி போட்டுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இந்த ஊசி போட்ட பிறகு அனுராதாவின் நிலைமை மோசமானதைத் தொடர்ந்து அவர் மே மாதம் 11ம் திகதி அட்வான்ஸ்ட் மெடிகேர் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர் முகர்ஜியின் கண்காணிப்பில் இருந்த இவர் சிகிச்சி பலனின்றி உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது(36).
மருத்துவமனையின் கவனக்குறைவால் தான் அனுராதா இறந்துவிட்டார் என்று கூறி அவரது கணவர் குணால் இந்திய தேசிய நுகர்வோர் (பூசல்கள்) குறை தீர்ப்பாணையத்தை அணுகினார்.
அவரது புகாரை விசாரித்த தீர்ப்பாணையம் குணாலுக்கு ரூ.1.73 கோடி வழங்குமாறு மருத்துவமனைக்கு கடந்த 2011ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த தொகை உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் இழப்பீடு வழங்காததால் இந்த வழக்கை தீர்ப்பாணையம் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றியது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் குணாலுக்கு தீர்ப்பாணயம் நிர்ணயித்த தொகைக்கு 6 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.5.96 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
மருத்துவர்கள் பல்ராம் பிரசாத் மற்றும் சுகுமார் முகர்ஜி ஆகியோர் குணாலுக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவர் பைத்யநாத் ஹல்தர் ரூ.5 லட்சமும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மீதமுள்ள தொகையை வட்டியுடன் சேர்த்து மருத்துவமனை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்திய வரலாற்றிலேயே ரூ.5.96 கோடி இழப்பீடு வழங்கப்படுவது இது தான் முதல் முறையாகும்.
 

நடிகை ஜியா கான் மரணத்தில் மறுவிசாரணை

:
நடிகை ஜியா கான் வழக்கு குறித்து மறுவிசாரணை நடத்துமாறு பொலிசாருக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த யூன் மாதம் 3ம் திகதிமும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலர் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தடவியல் அறிக்கையில் ஜியாவின் கழுத்தை யாரோ பெல்ட்டால் இறுக்கிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 1ம் திகதி ஜியாவின் அம்மா ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ஜியா தற்கொலை செய்யவில்லை என்றும் அவரை யாரோ கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
மேலும் ஜியா இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கருப்பு நிற டிராக் சூட்டில் வீட்டுக்கள் நுழைவது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. ஆனால் அவர் நைட்டியில் தூக்கில் தொங்கினார். தற்கொலை செய்யப் போகிறவர்கள் உடை மாற்றிவிட்டு தான் இறப்பார்களா என்று அவர் தனது மனுவில் கேட்டிருந்தார்.
எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ராபியாவின் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து மறுவிசாரணை நடத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.



 



24 October 2013

7 பெண்களின் பார்வை பறிப்பு கண் அறுவைசிகிச்சை முகாம்:


தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்த 7 பெண்கள் பார்வை இழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ரமேஷ்குமார் இதுதொடர்பாக தாக்கல் செய்த பொதுநல மனுவில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சேந்தமரத்தை சேர்ந்த மாரியம்மாள் (69), லட்சுமி (61), வி.செல்லம்மாள் (65), எம்.செல்லம்மாள் (63), ஜி.செல்லம்மாள் (63), மரியம் ஆயிஷா (52), சுப்பம்மாள் (61) ஆகியோருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் ஏப்ரல் 10ம் திகிதி கண் அறுவை சிகிச்சை நடந்தது.

பின்னர் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்த கண்ணில் எரிச்சல், நீர் வடிதல் ஏற்பட்டன. பாளை அரசு மருத்துவமனையில் சோதனை நடத்திய போது, 7 பேருக்கும் ஒரு கண் பார்வை பறிபோனது தெரியவந்தது.
எனவே பாதிக்கப்பட்ட இவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பார்வை இழப்புக்குக் காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் 2011ம் ஆண்டில் திருச்சி தனியார் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த 66 பேருக்கு பார்வை பறிபோனது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. அதேபோன்று இந்த சம்பவம் தொடர்பாகவும் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெய்சந்திரன், வேணுகோபால் மனுவுக்கு, சிபிஐ இணை இயக்குனர், மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர், நெல்லை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி மற்றும் தென்காசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆகியோர் 4 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

                                 

தக்க பதிலடி கொடுப்போம்: ஷிண்டே எச்சரிக்கை

 
பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், அப்பகுதிகளில் மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவலுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்திய துருப்புக்களிடம், தற்போதுள்ள நிலைமையை கேட்டறிந்தார்.
பின்னர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஷிண்டே, பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார். பாகிஸ்தான்

 எல்லைக்கு கூடுதலாக எல்லைப்பாதுகாப்பு படைகள் விரைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எல்லையில் உள்ள தீவிரவாதிகளுக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத் பயிற்சி அளித்து வருவதாக தகவல் வந்துள்ளது என்றும் ஷிண்டே தெரிவித்தார்.
 

23 October 2013

அப்பா பாட்டி, போல நானும் கொல்லப்படலாம்: ராகுல் காந்தி


எனது பாட்டி இந்திரா மற்றும் அப்பா ராஜிவைப் போல நானும் கொலை செய்யப்படலாம், ஆனால் அதற்கு அச்சப்படமாட்டேன் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி 2வது கட்டமாக இன்று பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி , நான் என் உள்ளத்தில் இருப்பதையே பேசி வருகிறேன். இதுவரை நான் சொல்லாத விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இதைப்பற்றியெல்லாம் பேசத்தேவையில்லை, இருப்பினும் சொல்கிறேன். எங்களுக்காக என் அப்பா ராஜிவ் காந்தி போட்ட கட்டுப்பாடுகளை உடைத்து எங்களைக் காப்பாற்றியவர் பாட்டி இந்திராதான்.
என்னுடைய பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முன்பாக அவர் மீது கையெறி குண்டுகளை வீச திட்டமிட்டிருந்ததாக பின்னாளில் அறிந்து கொண்டேன். அன்று நான் புவியியல் பாடம் படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது ஒருநபர் எனது வகுப்பறைக்கு வந்து ஆசிரியரிடம் ஏதோ

சொன்னார், உடனே ஆசிரியர் என்னை வீட்டுக்குப் போகச் சொன்னார்.என்ன நடக்கிறது என்பதை அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. என்னுடைய வீட்டில் பணிபுரிந்த பெண்மணியிடம் அப்பா, அம்மா நலமா என்று கேட்டேன். ஆம் என்றார். ஆனால் பாட்டியைப் பற்றி கேட்ட போது இல்லை வீட்டுக்கு வா என்று சொல்லிவிட்டனர்.

நாங்கள் வீட்டுக்குப் போனபோது தரையில் பாட்டியின் ரத்தம் சிதறிக் கிடந்தது. இன்னொரு அறையில் என்னிடம் நண்பர்களாகப் பழகியவர்கள் ரத்
தத்தில் மிதந்து போயிருந்தனர்.
என்னிடம் நண்பர்களாக பழகிய பியாந்த் சிங், சத்வத்சிங் மீது கடும் கோபம் எழுந்தது. இந்த கோபத்தை பல ஆண்டுகாலம் அடக்கியே வைத்திருந்தேன். இதேபோல் என்னுடைய தந்தையும் படுகொலை செய்யப்பட்டார்.

இப்படியான சம்பவங்களை இருமுறை நான் பார்த்துவிட்டேன். அவர்கள் என்னையும் கூட கொலை செய்யலாம். அதற்கெல்லாம் நான் அச்சப்படவில்லை, காங்கிரஸ் கட்சிதான் மக்களுக்கான உணவுக்கு உத்தரவாத மசோதாவை நிறைவேற்றியது.

மேலும் விவசாயிகளின் நிலத்தைப் பாதுகாக்கும் மசோதாவையும் நிறைவேற்றியது என்றும் இந்தியாவில் ஏழைகள் வாழ்கிறார்கள் என்று சொல்லவே கூடாது என்பதற்காக உணவு உத்தரவாத மசோதாவை நிறைவேற்றினோம் எனவும் கூறியுள்ளார்.
 

அதிகளவு காணாமல் போகும் பெண் குழந்தைகள்! அதிர்ச்சி தகவல்


 
டார்ஜிலிங்கில் ஆண்டு தோறும் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் ஒப்பிடும் போது,

சுற்றுலாத் தளமான டார்ஜிலிங்கில் குழந்தைகள் காணாமல் போவது அதிகமாக இருப்பதாக அம்மாநில குற்றப்பதிவு ஆணையம் கண்டறிந்துள்ளது.
இங்கு சமீபகாலமாக காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. மேலும் மாயமாகும் குழந்தைகளில் அதிகமானோர் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

டார்ஜிலிங்கில் கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் 924 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. இது 2010ம் ஆண்டில் 430 ஆக இருந்ததாகவும் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள விவரத்தின் படி, மேற்கு வங்காளத்தில் கடந்தாண்டு சுமார் 19000க்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.

கணக்கில் வந்துள்ளது கொஞ்சம் தான், ஆனால் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று சிஐஎன்ஐ அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் எல்லைப் பிரச்சினையால் நேபாளத்திற்குள் நுழையும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கம்பெனிகள் மற்றும் வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் இதற்குக் காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போகும் குழந்தைகளில் அதிகமானோர் பெண் குழந்தைகள் என்பதால் அவர்கள் வீட்டு வேலை மற்றும் பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
 

மாநாட்டை புறக்கணிப்பதற்கான‌ இந்தியாவில் ஆதரவு


கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்துலக மன்னிப்புச்சபை ஆரம்பித்துள்ள பரப்புரைக்கு இந்தியாவில் இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அனைத்துலக மன்னிப்புச்சபையின், இந்தியாவுக்கான தலைமை நிறைவேற்று அதிகாரி அனந்தபத்மநாபன் வெளியிட்டுள்ளார்.
இந்தப் பரப்புரை கடந்த 5ம் நாள் தொடங்கப்பட்டது என்றும், கொமன்வெல்த் மாநாடு துவங்கும் வரை இது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொமன்வெல்த் மாநாட்டில் இருந்து இந்தியா ஒதுங்கிக் கொள்வதன் மூலம், சிறிலங்காவில் மனிதஉரிமைமீறல்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தெளிவான சமிக்ஞை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பப்படும்.

இந்தியப் பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்றால், சிறிலங்காவில் கடந்த காலத்தில் நடந்த, தற்போது நடக்கும் எண்ணற்ற மனிதஉரிமை மீறல்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதாகி விடும் என்றும் அனந்தபத்மநாபன் தெரிவித்துள்ளார்.

போரின் முடிவுக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை, நீதியின் முன் நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சித்திரவதைகள், ஆட்கடத்தல்கள், எண்ணற்ற ஏனைய மனிதஉரமை மீறல்கள் நடக்கின்ற நாட்டில், கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவது வெட்கக்கேடானது என்றும் அனந்தபத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்.

கூடங்குளம்: முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்


  கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. முதல் நாளில் 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கியதாகவும், முதல்கட்டமாக 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார். மேலும், மின் உற்பத்தி படிப்படியாக உயர்த்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



மாஸ்கோவில் நடைபெறும் இந்திய - ரஷ்ய 14-வது உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விடுத்த அழைப்பை ஏற்று மன்மோகன் சிங் மாஸ்கோ சென்றுள்ள நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்தியா, ரஷ்யா கூட்டு முயற்சியில், கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் 2011-ம் ஆண்டு இறுதியில் கூடங்குளத்தில் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அணுமின் நிலையத்தின் ஆயத்தப் பணிகள் தாமதமானதை அடுத்து மின் உற்பத்தியை துவக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
 
கூடங்குளமும் இடிந்தகரை போராட்டமும்

இதற்கிடையில், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரை கடலோர கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமர் தலைமையில் போராட்டங்கள் வலுத்தன.

அணு உலை பாதுகாப்பானது அல்ல, கொதி நீர் கடலில் சேர்வதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும், பேரிடர் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து போராட்டங்கள் நடை பெற்றன. இதனால், அணு மின் நிலைய பணிகள் மேலும் தாமதமானது.
 
இதனைத் தொடர்ந்து அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு கூடங்குளத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் கூடங்குளத்தில் பணிகள் தொடங்கின.
 
மின் உற்பத்தி இப்போது தொடங்கும், அப்போது தொடங்கும் என பல்வேறு நேரங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

  முதல் நாளில் 160 மெகாவாட்

  கூடங்குளம் அணு மின் நிலையத்தில், முதலாவது அணு உலையில் முதல் நாளில் 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நிலைய இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார்.
 
முதற் கட்டமாக 75 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், பின்னர் 160 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்ததாகவும் கூறினார். இன்னும் ஓரிரு நாட்களில் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றார்.
 
நிர்ணயிக்கப்பட்ட 400 மெகாவாட் மின்சாரம், இந்திய அணுசக்தி கழகத்தின் அனுமதி கிடைத்த பிறகு துவங்கும் என்றார்.
 
உதயகுமார் கருத்து:

 கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஏமாற்று நாடகம் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

"கடந்த ஜூலை13-ம் தேதியே மின் உற்பத்தி தொடங்கிவிட்டதாக அறிவித்தார்கள். இப்போது மீண்டும் மின் உற்பத்தி செய்துள்ளதாக புதிதாக கூறுகிறார்கள்.
 
அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து, எங்களது ஆதரவு அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாளை (புதன்கிழமை) ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்" என்றார் அவர்
 

கூடங்குளத்தில் மின் உற்பத்தி ஸ்டார்ட்!

                    
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில் இன்று மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட இரண்டு அணு உலைகளை அமைத்துள்ளது.
இந்த அணு மின் நிலைய கட்டுமான பணி முடிந்து, மின் உற்பத்தி துவங்கும் நேரத்தில் இதற்கு எதிராக அந்த ஏரியா மக்கள் நடத்திய போராட்டத்தால் மின் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னா் ஒரு வழியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கியதை அடுத்து மின் உற்பத்திக்கான பணிகள் நடைபெற்று வந்தன.
இதனைத் தொடா்ந்து இன்று அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.முதல்கட்டமாக 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர்தெரிவித்துள்ளார். 

                         


 
 

 
 
 
 

21 October 2013

ரஷ்ய பயணத்தை கண்டித்து இடிந்தகரையில் கண்டன ஆர்ப்பாட்டம்



கூடங்குளம் 1 2 அணு உலைகள் 2004–ம் ஆண்டே இயங்கி விடும் என்று கூறினார்கள். ஆனால் அவைகள் இன்னும் இயங்கவில்லை. அவைகள் இனியும் செயல்பட வாய்ப்பேயில்லை. தொழிற்நுட்பக் காரணங்களால் முதல் இரண்டு அணு உலைகள் முடங்கிப்போய் கிடக்கின்றன. கூடங்குளம் அணுஉலைகள் குறித்து மத்திய அமைச்சர்கள் அணுசக்தித்துறை

அதிகாரிகள் பலரும் முரண்பட்ட தகவல்களை மாற்றி மாற்றி கூறி மக்களை கடந்த 25 ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர்.
தரம் குறைந்த இயந்திர அணுஉலை உதிரிப்பாகங்கள் வால்வுகள் கண்டன்சர் பிரச்சனை நீராவி என்ஜின்களில் கோளாறுகள் வால்வுகளில் கசிவு போன்ற பல சிக்கல்கள் கூடங்குளம் அணுஉலைகளில் உள்ளன. இப்படி

 பாழடைந்து போல அணு உலைகள் குறித்தும் அவைகள் செயல்படாமல் போனதற்கான முறையான பதிலை போராடுகிற மக்களுக்கும் இந்திய நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்தாமல் இன்னும் மூடி மறைத்து கொண்டு தங்களுடைய தவறுகளை ஊழல்களை மறைப்பதற்காக தொடர்ந்து பல பொய்களை கூறி வருகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் போராடுகின்ற மக்களை மதிக்காமல் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தையும் மதிக்காமல் அதை தளர்த்தும் விதமாகவும் பல இலட்சம்

ஊழல்களில் சிக்கித் தவிக்கும் காங்கிரசு கட்சி மத்திய அரசு பதவி விலக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் காபந்து அரசு நடத்திக்கொண்டு இருக்கும் மன்மோகன்சிங் நிலக்கரி சுரங்க ஊழலில் சிக்கி இன்னும் பதவி

விலகாமல் இன்னும் பொறுப்பு இல்லாமல் நடந்து கொள்ளும் பிரதமர் இந்திய நாட்டு மக்கள் சார்பாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் தகுதி இழந்த பிரதமர் தற்போது மீண்டும் ரஷ்யா சென்று அணுஉலையில் விபத்து நடந்தால் இழப்பீடு எதுவும் கேட்டமாட்டோம் என்கிற அடிப்படையில் கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் மேலும் 3 மற்றும் 4 அணுஉலைகளை அமைக்க ஒப்பந்தம் செய்வதற்காக இந்திய இறையாண்மையை

அடகுவைக்கும் விதமாக நீதிமன்றங் களையும் பாராளுமன்றத்தையும் இந்திய நாட்டுச்சட்டங்களையும் மதிக்காமல் இன்று ரஷ்யா செல்கிறார்.
பிரதமரின் இந்த மக்கள்விரோத தேசவிரோத போக்கைக் கண்டித்தும் பிரதமரின் இந்தச் செயல்பாட்டை தொடக்க நிலையிலே கண்டிக்காத தமிழகக்கட்சிகளின் நிலைப்பாட்டைக் கேள்விகேட்டும்

இடிந்தகரையில் ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் இடிந்தகரை கிராமத்தின் மேற்கு பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.புகைபடங்கள்,





20 October 2013

ஓரினச்சேர்க்கையால் வங்கி அதிகாரி கொலை!!:

 
ஓரினச்சேர்க்கை பிரச்சனையால் வங்கி அதிகாரியை கொலை செய்தோம் என்று கைதுசெய்யப்பட்ட 6 வாலிபர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
வேளச்சேரி வீனஸ் காலனி விரிவு 2வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ்.
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பெசன்ட் நகர் கிளையில் உதவி மேலாளராக பணிபுரியும் இவர் கடந்த 16ம் திகதி வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
மேலும் அவரது கைபேசி, மோட்டார் சைக்கிள் கொள்ளை போய் இருந்தன. பீரோவும் உடைக்கப்பட்டு வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

பீரோ உடைக்கப்பட்டு மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்ததால் கொள்ளை முயற்சியில் கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் முதலில் பொலிசார் விசாரணையை தொடங்கினர்.
நாகராஜ் கொலையுண்ட இரவில் அவருடன் நண்பர்கள் சிலர் தங்கி இருந்ததாக கீழ் வீட்டில் வசிக்கும் அவரது தாய் கமலம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாகராஜிடம் நெருக்கமாக உள்ள நண்பர்கள் யார் என்ற விபரத்தையும், அவருடன் கைப்பேசியில் பேசுபவர்களுடைய பட்டியலையும் எடுத்தனர்.

இதில் அவருடன் அடிக்கடி பேசி தொடர்பு வைத்திருந்த வாலிபர்கள் சிவராம், கவுதம், கோகுல்கண்ணன், சுகன், ராஜு, விக்னேஷ் மற்றும் விஜய் ஆகியோர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
இதனைத்  தொடர்ந்து திருவான்மியூர் பகுதியில் பதுங்கி இருந்த சிவராம், உள்பட 6 பேரை பொலிசார் பிடித்தனர். விஜய் மட்டும் சிக்கவில்லை.
கைது செய்யப்பட்ட 6 பேரும் பொலிஸ் நிலையத்தில் அளித்த வாக்குமூலத்தில், வங்கி அதிகாரி நாகராஜுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்தோம்.

சம்பவம் நடைபெற்ற அன்று இரவு மது அருந்தி ஜாலியாக இருந்த போது மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நாங்கள் நாகராஜை கழுத்தை நெரித்து கொலை செய்தோம் என்றும் பொலிசாரின் விசாரணையை திசை திருப்புவதற்காக கொள்ளையடித்தது போல் பீரோவை உடைத்து, மிளகாய் பொடியை தூவினோம் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் தப்பி ஓடிய விஜய்யை பிடிக்க தனிப்படை பொலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
 

கப்பலின் அமெரிக்க கேப்டன், பொறியாளர் திடீர் கைது!

 
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பலின் கேப்டன் மற்றும் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே அமெரிக்க இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த ‘சீமேன் கார்டு ஓகியா‘ என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 11ம் திகதி இரவு மடக்கிப் பிடித்தனர்.

இந்த கப்பலில் கேப்டன் உள்ளிட்ட 35 பேர் இருந்தனர். அவர்களிடம் 35 அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் 5 ஆயிரத்து 675 தோட்டாக்கள் இருந்தன.
இது தொடர்பாக கப்பலில் இருந்த 33 பேரையும் நேற்று முன்தினம் கியூ பிரிவு பொலிசார் கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

கப்பல் பராமரிப்புக்காக கேப்டன் டட்னிக் வாலன் டின் மற்றும் தலைமை பொறியாளர் இருவரும் கப்பலில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கப்பல் நிறுவனம்,தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்திடம் கப்பலை பராமரிப்பு செய்வதற்கான பணிகளை தற்காலிகமாக ஒப்படைத்தது.

இதனால் கப்பல் கேப்டன் டட்னிக் வாலன்டின் மற்றும் தலைமை பொறியாளர் இருவரையும் பொலிசார் நேற்று மாலை 4 மணிக்கு கைது செய்து முத்தையாபுரம் காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தலைமை பொறியாளர் ட்ரிக்கோ வாலரின், பொலிசார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக கூறி குற்றம் சாட்டி கூச்சலிட்டதால் கியூ பிரிவு எஸ்.பி.பவானீஸ்வரி மற்றும் அதிகாரிகள் இருவரையும் தூத்துக்குடி விரைவு நீதிமன்ற நீதிபதி அகிலாதேவி வீட்டிற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர்.

பின்னர் இருவரையும் அக்டோபர் 31ம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஆயுத கப்பலுக்கு டீசல் வழங்கியதாக தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபர் மரியஅன்டன் விஜய், விசைப்படகு ஓட்டுநர், வெங்கடேஷ் ஆகிய 3 பேரிடமும் கியூ பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

பிளவுபடுத்தும் காங்கிரஸை ஆட்சியில் இருந்து தூக்கியெறிய


மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபட்டுள்ள காங்கிரஸை மத்திய ஆட்சியில் இருந்து தூக்கியெறிய வேண்டும் என்று பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.
பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி அதன் பின் முதன் முறையாக உத்தரப்பிரதேச்துக்கு சனிக்கிழமை வருகை

 தந்தார். நாட்டிலேயே அதிகபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தின் கான்பூர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். ஆயிரக்கணக்கானோர் திரண்ட இந்தக் கூட்டத்தில் ராமர் கோவில் விவகாரத்தை மோடி குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பேசியதாவது:

மத்திய அரசுக்கு ஒரே மதம்தான் இருக்க வேண்டும். நாட்டுக்கே முதல் முன்னுரிமை என்பதே அது. அதற்கு ஒரே புனிதநூல்தான் இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம்தான் அது.

மதச்சார்பின்மை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி என் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. நாட்டை ஆளும் கட்சியான அதனிடம் தேர்தல்களில் வெற்றி பெறுவலதற்கு ஒரு மந்திரம், ஒரு கோஷம், ஒரு மருந்து உள்ளது. மக்களைப் பிளவுபடுத்துவதற்காக அவர்கள் மதச்சார்பின்மை மந்திரத்தை உச்சரித்த வண்ணம் இருக்கிறார்கள்.

ஆனால், பா.ஜ.க.வோ மக்களை ஒன்றிணைக்க உறுதி பூண்டுள்ளது. எங்கள் கட்சியின் லட்சியமானது, ஹிந்துவோ, முஸ்லிமோ, சீக்கியரோ, புத்த மதத்தினரோ அவர்கள் அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான்.
நாம் வாக்கு வங்கி அரசியலை ஒரேயடியாக குழிதோண்டிப் புதைக்க வேண்டும். நாம், வளர்ச்சியை நோக்கிய அரசியல் என்ற பாதையில் பயணிக்க வேண்டும்.

உ.பி.யைப் பீடித்த கிரகணம்: உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜவாதியும் எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரித்து வருகின்றன. இந்த மூன்று கட்சிகளும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இந்த மாநிலத்தை கிரகணம் போல் பீடித்துள்ளன. உத்தரப் பிரதேச மாநிலம், தான் இழந்த புகழை மீண்டும் பெறுவதற்காக, இந்த கிரகணத்தில் இருந்து விடுதலை பெற விரும்புகிறது. அதேபோல், இந்த மூன்று கட்சிகளையும் தில்லி அதிகாரபீடத்தில் இருந்து அகற்றுவதில் உத்தரப்பிரதேச மக்கள் முன்னணியில் நிற்க வேண்டும்.

அந்த நாளில் வெள்ளையர்களை விரட்ட வேண்டும் என்ற அழைப்பு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரில் (கான்பூர்) இருந்தே விடுக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஓராண்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால், மாநில அரசு இன்னமும் வாக்கு வங்கி அரசியலில்தான் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதான கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை விடுதலை செய்ய அகிலேஷ் யாதவ் அரசு முயற்சி எடுத்து வருகிறது.

அவர்கள் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுகிறார்கள். அவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக உத்தரப்பிரதேசத்தையோ நாட்டையோ அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு, ஒற்றுமையாக இருக்கும் சகோதரர்களைப் பிரிப்பது என்பது காங்கிரஸின் மரபணுவிலும் ரத்தத்திலும் சிந்தனையிலும் இரண்டறக் கலந்துள்ளது.

மக்களை ஏமாற்றுவதில் நிபுணர்கள்: போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் நிபுணர்களாகி விட்டன. காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசை புறவாசல் வழியாகக் காப்பாற்றி வருகின்றன. அவை தங்களின் தவறுகளை மறைப்பதற்காக இதைச் செய்கின்றன.

நாட்டின் நிலை இவ்வாறு இருப்பதற்கு காங்கிரஸýக்கு எவ்வெளவு பொறுப்பு உள்ளதோ அதே அளவு பொறுப்பு இந்தக் கட்சிகளுக்கும் உள்ளது. “இந்தியாதான் முதலில்’ என்ற மந்திரத்தை இளம் தலைமுறையினர் தங்கள் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் கொள்ள வேண்டும் என்றார் மோடி.
இளைஞர்களுக்கு அதிகாரம்

முன்னதாக, குஜராத் மாநிலம் காந்திநகரில், ரிலையன்ஸ் நிறுவனம் நிர்வகித்து வரும் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர்

பேசுகையில், “”பல தலைவர்களுக்கு ஆட்சிக்கு வருவதற்கான கருவிதான் இளைஞர்கள். ஆனால் என்னைப் பொருத்த வரை, இளைஞர்களுக்கு உரிய அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். சமீபத்தில் “தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் இளம் அரசு அமையும்’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே மோடி இவ்வாறு பேசியதாகக் கருதப்படுகிறது.

19 October 2013

பெண்ணின் சடலத்துடன் 10 மாதங்கள் வாழ்ந்த குடும்பம்



நாகர்கோவிலில் இறந்து போன பெண்ணின் சடலத்துடன் அவரது குடும்பமே 10 மாதங்கள் வாழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் ராமவர்மபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணிய பிள்ளை. இவர் இறந்து விட்டார். இவரது மனைவி சரோஜினி(89). இவர்களுக்கு உமாதேவி(56) என்ற மகளும், பெருமாள், செல்வம் பிள்ளை (53) என்ற மகன்களும் உண்டு.
உமாதேவியின் கணவர் பெயர் தாணுப்பிள்ளை. இவர்களுக்கு சிவபிரசாத் (25) என்ற மகன் உள்ளார். குடும்ப தகராறு காரணமாக உமாதேவி தனது கணவரை பிரிந்து, மகன் சிவ பிரசாத்துடன் ராமவர்மபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் பெருமாளும் இறந்து போனார். இதையடுத்து சரோஜினியுடன், செல்வம் பிள்ளை, உமாதேவி, அவரது மகன் சிவ பிரசாத் ஆகியோர் மட்டுமே வசித்து வந்தனர்.

செல்வம் பிள்ளைக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டும் டிசம்பர் 3ம்திகதி , உடல் நிலை சரியில்லாமல் உமாதேவி இறந்து விட்டார்.
ஆனால் அவரது உடலை வீட்டில் இருந்தவர்கள் அடக்கம் செய்யாமல் ஒரு துணியில் நன்றாக உடலை கட்டி வீட்டின் ஒரு அறைக்குள் வைத்து பூட்டி விட்டனர்.
சரோஜினி வீடு 10 அறைகள் கொண்ட பெரிய பங்களா வீடு ஆகும். மேலும் இவர்களுடன் அக்கம் பக்கத்தினர் யாரும் எந்த தொடர்பும் வைத்ததில்லை. எப்போதும் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே தான் இருப்பார்கள்.

இந்நிலையில் நேற்று மதியம் செல்வம்பிள்ளை மட்டும் வீட்டில் இருந்து வெளியே வந்து அருகில் வசிக்கும் சாந்தி வீட்டுக்கு சென்று செலவுக்கு பணம் கிடைக்குமா? என கேட்டுள்ளார். அப்போது சாந்தியின் மகன் ரூ.500 கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சாந்தி அவருடன் வீட்டிற்குள் சென்றபோது அங்கிருந்த ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வந்தது. அந்த அறையை சாந்தி பார்த்ததும், வீட்டில் இருந்தவர்களின் நடவடிக்கை மாறியது.
பதற்றத்துடன் வெளியே ஓடி வந்த சாந்தி இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சந்தேகத்துக்குரிய அறையை திறந்து உள்ளே துணியில் கட்டி வைக்கப்பட்டு இருந்ததை வெளியே எடுத்து வந்து பிரித்து பார்த்ததில் அதிர்ச்சி அடைந்தனர்.

உமாதேவி உடல் அழுகிபோய் இறுகிய நிலையில் இருந்தது. உடனடியாக உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வீட்டில் இருந்தவர்களிடம் கேட்ட போது, ஏதோ உருவத்தை பார்த்து இறந்து விட்டாள் . மேற்கொண்டு எதுவும் கேட்காதீர்கள் என கூறியுள்ளனர்.

பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தியும் எதையும் அவர்கள் எதையும் கூறவில்லை.

கிட்டத்தட்ட சுமார் 10 மாதங்களாக சடலத்துடன் இவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்கள் வீட்டு அருகில் யாரும் செல்லாததால் துர்நாற்றம் தெரியவில்லை.
இந்த சம்பவமானது நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

மோடிக்காக பாதை மாறிய தமிழக முதல்வர்


முதல்வர் ஜெயலலிதா, வழக்கமாக செல்லும் பாதையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வந்ததால் தமிழக முதல்வர் மாற்றுப்பாதையில் சென்றார்.

சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில் பங்கேற்க, நேற்று மாலை, குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, கடற்கரை சாலை வழியாக வந்தார்.
அவர் வருவதற்கு முன் தமிழக முதல்வர் பகல் 2:00 மணிக்கு, தலைமைச் செயலகம் வந்தார்.

அவரை கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், கறிக்கோழி வளர்ப்பு நிறுவன உரிமையாளர்கள் சந்தித்து, கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு கண்டதற்கு, நன்றி தெரிவித்தனர்.
இச்சூழலில், முதல்வரை, நரேந்திரமோடி சந்திக்கவுள்ளதாக, தகவல் பரவியது. ஆனால், அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. வழக்கமாக முதல்வர், தலைமைச் செயலகத்தில் இருந்து, போயஸ் கார்டனுக்கு,

 கடற்கரை சாலை வழியே செல்வார். மோடி அவ்வழியே வருவதாக இருந்ததால், வழியில் மோடியை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதால், முதல்வர், நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து, கடற்கரை சாலை வழியே செல்லாமல், மவுன்ட் ரோடு வழியாக சென்றார்
 

17 October 2013

மாலை முரசு நாளிதழின் அதிபர் மரணம்!


மாலை முரசு அதிபரும், தேவி வார இதழின் நிர்வாக ஆசிரியருமான பா.ராமச்சந்திர ஆதித்தன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.
தமிழர் தந்தை என்று போற்றப்பட்டவரும் தினத்தந்தி நிறுவனருமான சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகன் பா.ராமச்சந்திர ஆதித்தன்.

தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பிறந்த இவர் தந்தையின் வழியில் பத்திரிகைத் துறையில் நுழைந்து மாலை முரசு பத்திரிகையின் அதிபரானார்.
பின்பு தேவி வார இதழைத் தொடங்கினார். தொடர்ந்து தேவியின் கண்மணி, பெண்மணி போன்ற இதழ்களையும் தொடங்கி நடத்தி வந்தார்.
தமிழ் நாளிதழ் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய புதுமையான நாளிதழான 'கதிரவனை' சென்னையிலும் நெல்லையிலும் தொடங்கினார்.

 அன்றைக்கு மிக மிக வேகமாக வளர்ந்த நாளிதழ் என்ற பெருமை கதிரவனுக்கு உண்டு.
சென்னை அடையாறில் வசித்து வந்த ராமச்சந்திர ஆதித்தன், இன்று காலை லேசாக நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவர் உயிர் பிரிந்துவிட்டது.

ராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபங்களும் முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் அடையாறில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை காலை பெசன்நகர் மயானத்தில் அவர் உடல் தகனம் செய்யப்படுகிறது.
 

15 October 2013

அமெரிக்கக் கப்பல் குறித்து அறிக்கை கோரும்


தூத்துக்குடி அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இயங்கிய அமெரிக்கக் கப்பல் குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கோரியுள்ளது.

இந்தக் கப்பல் தொடர்பான விவரங்கள், அதன் ஊழியர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள், இந்திய கடல் எல்லைக்குள் அது சுற்றித் திரிந்ததன் நோக்கம் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக விசாரணை நடத்தி வரும் தமிழக அரசு மற்றும் விசாரணை அமைப்புகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"எங்களுக்கு விரிவான அறிக்கை தேவை. அந்தக் கப்பலில் ஆயுதங்கள் இருந்துள்ளதாலும், இந்தியாவில் அக்கப்பல் சட்டவிரோதமாக டீசல் வாங்கியுள்ளதாலும் இது மிகவும் கவலையளிக்கும் விவகாரமாகும்'' என்றார்
 

குழந்தையை கொன்ற தந்தை பெண்ணாக பிறந்ததால்




ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில். மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு அவரது மனைவி கருவுற்றிருந்த போது, 'எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்' என்று இன்ப கனவில் மிதந்த அவருக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.

அடுத்தது ஆண் குழந்தை தான் என்று உறவினர்கள் உசுப்பேற்றி விட்டதால், சில மாதங்களில் அவரது மனைவி மீண்டும் கருவுற்றார். இரண்டாவது குழந்தையும் பெண்ணாக போனதால், ஆண் குழந்தையை பெற்றே தீர வேண்டும என்ற முனைப்பில் தனது மனைவியை மூன்றாவது குழந்தைக்கும் தாயாக்கினார்.

மூன்றாவது பிரசவத்திலும் அவரது எண்ணம் ஈடேறாததால் சோகத்தில் மூழ்கிப்போன ஷேக் இஸ்மாயிலை குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டது.
நேற்று காலை நிதானம் தெரியாத போதையில் வீட்டுக்கு வந்த அவர் தனது பாக்கெட்டில் இருந்த மது பாட்டிலை திறந்து 3வது மகளான 18 மாத குழந்தையின் வாயில் வற்புறத்தி ஊற்றினார்.

தொண்டை மற்றும் குடல் எரிச்சலில் வீறிட்டு அழுத குழந்தை சிறிது நேரத்திற்குள் மயங்கி விழுந்தது, நிலமை விபரீதமானதை உணர்ந்த அவர் குழந்தையை குண்டூர் அரசு வைத்தியசாலை வாசலில் போட்டுவிட்டு தப்பி தலைமறைவாகி விட்டார்.

உயிருக்கு போராடிய குழந்தையை தூக்கிச் சென்ற வைத்தியசாலை ஊழியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை நேற்றிரவு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தலைமறைவாக உள்ள ஷேக் இஸ்மாயிலை பிடிக்க பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்
 

14 October 2013

அமெரிக்க ராணுவத்தின் முதல் சீக்கிய வீரருக்கு உயர் பதவி


 
டெல்லியில் பிறந்த சீக்கியரான சிம்ரன்ப்ரீத் லம்பா கடந்த 2006 ஆம் ஆண்டில் தனது மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.

2009 ஆம் ஆண்டு தொழிற்துறையில் பொறியியற்கல்வி முடித்தவுடன் அந்நாட்டு ராணுவத்தில் சேருவதற்கான விண்ணப்பத்தை லம்பா அளித்தார்.
சீக்கிய மத கோட்பாடுகளான அவரது தலைப் பாகை, நீண்ட தலைமுடி மற்றும் தாடி போன்றவை குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஒன்பது மாதம்

 ஆலோசனை செய்து அதன்பின்னர் லம்பாவைத் தேர்ந்தெடுத்தனர். அந்த வருடமே மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயின்ற இரண்டு சீக்கிய அதிகாரிகள் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர்.
அதனைக் கண்ட லம்பாவிற்குத் தானும் சாதாரண படைவீரர் என்ற
நிலையிலிருந்து உயர்பதவியை அடையமுடியும் என்ற எண்ணம்

தோன்றியது. ஆயினும், மதம் குறித்த அவரது ஆழ்ந்த நம்பிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அதன்பின்னர் பிறமொழிப் புலமை பெற்ற அயல்நாட்டவர்கள் என்ற சிறப்புப் பிரிவின் கீழ் அவர் தற்போது கார்ப்போரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த லம்பா, மற்ற வீரர்களைப் போலவே தானும் ராணுவத்தின் அனைத்துக் கடமைகளையும் செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.


கடந்த 30 வருடங்களில் அமெரிக்க ராணுவத்தில் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீக்கியர் என்ற பெருமையையும் லம்பா பெறுகின்றார். 29 வயதான லம்பா தற்போது அந்நாட்டு ராணுவத்தின் ஐந்தாம் நிலை உயர்பதவியை வகிக்கின்றார். தனது முயற்சி கடினமான ஒன்றாக இருந்தபோதிலும் மற்ற சீக்கியர்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்?:

 
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு பிரதர் இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டியேற்படும் என தெரிவித்துள்ளது.

தமிழக கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வது நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமானது, இவ்வாறு கூட்டணி வைத்துக்கொள்ள இலங்கை விஜயத்தை தவிர்க்க நேரிடும்.

தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமன்றி, திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கருணாநிதி மற்றும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களும் இலங்கை பயணத்தை கைவிடுமாறு மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்திய மத்திய அமைச்சில் அங்கம் வகிக்கும் ஜீ.கே. வாசன், மற்றும் வி. நாராயணசாமி ஆகியோரும் மன்மோகன் சிங் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று வலியுறுத்தி வருவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

13 October 2013

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தலை துண்டித்து கொலை


பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டம் கார்கைவாடி கிராமத்தை சேர்ந்த இரு குடும்பத்தினரிடையே நீண்டகாலமாகவே நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஒரு குடும்பத்தினர் மிகவும் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் அரிவாளால் மற்றொரு குடும்பத்தினரை வெட்டினர்.

இந்த சண்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகள் என 3 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர் என்று கிஷன்கஞ்ச் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் தெரிவித்தார்.
 

பைலின் புயலில் தவித்த மீனவர்களை காப்பாற்றிய ஜெயலலிதா


பைலின் புயலால் ஒடிசாவில் சிக்கித் தவிர்த்த தமிழகத்தை சேர்ந்த 18 மீனவர்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் தூத்தூர், ஏழுதேசம்சின்னத்துறை, இரையுமன்துறை, மேல்மிடாலம் மற்றும் கோடிமுனை பகுதிகளைச் சார்ந்த 18 தமிழக மீனவர்கள், அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளில் கடந்த 22.9.2013 முதல் ஒடிசா மாநில கடற்பகுதியிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
வங்கக்கடலில் உருவான பைலின் புயல், ஒடிசா மாநிலம் பாரதீப்

மற்றும் கோபால்பூர் பகுதியில் கரையை கடக்கவிருப்பதை அறிந்த மீனவர்கள் தங்களது இரு படகுகளுடன் 12.10.2013 அன்று கரை திரும்ப முயன்றுள்ளனர்.
மேற்படி கடும் புயலின் காரணமாக கடலின் சீற்றம் மற்றும் கடல் அலை அதிக உயரத்திற்கு எழுந்ததாலும், இவற்றுடன் பெருமழை பெய்ததாலும், மீன்பிடி விசைப்படகுகளில் கரை திரும்புவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்த வண்ணம் இருந்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் இவர்களது படகிலிருந்த எரிபொருள் முழுவதும் தீர்ந்துவிட, தங்களையும் தங்களது படகுகளையும் காப்பாற்றிட கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உறவினர்களுக்கு கைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தகவல் நேற்று பிற்பகல் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இத்தகவல் அறிந்ததும் முதலமைச்சர், தலைமை செயலர், கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலர் ஆகியோருக்கு இந்திய கடலோர காவல்படை,

 கப்பற்படை மற்றும் ஒடிசா மாநில உயர் அதிகாரிகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு புயலில் சிக்கித் தவிக்கும் 18 மீனவர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சென்னையிலுள்ள இந்திய கடலோர காவல்படை மற்றும் கப்பல்படை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு நடுக்கடலில் புயலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மேலும் ஒடிசா மாநில சிறப்பு மீட்புபணி ஆணையரையும், ஒடிசா மாநில மீன்வளத்துறை உயர் அலுவலர்களையும் தொடர்பு கொண்டு இம் மீனவர்களை உடனடியாக மீட்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னையிலுள்ள கடலோர காவல்படை, கொல்கத்தாவிலுள்ள கடலோர காவல்படையினரை தொடர்பு கொண்டு நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் உடனடியாக மீட்கவும் நடவடிக்கை மேற்கொண்டது.

ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே கரையை கடந்த பைலின் புயலின் சீற்றத்தில் மேற்படி மீனவர்களது படகு சேதமுற்று, அப்படகிலிருந்த 18 மீனவர்களும் ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஜகசன்பூர் மாவட்டத்தின் கடலோர குக்கிராமமான இராமத்துரா எனும் இடத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.

இக்குக்கிராமமானது புயலின் தாக்கத்தால் தொலைதொடர்பு, போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகியவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், கரைசேர்ந்த மீனவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி, உணவு மற்றும் குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இவ்விவரம் உடனடியாக ஒடிசா மாநில நிர்வாகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, மாவட்ட நிர்வாகமும் கடலோர காவல்படையும் இணைந்து மருத்துவ வசதிகளுடனான மீட்புகுழு அக்கிராமத்திற்கு விரைந்து சென்று 18

மீனவர்களுக்கும் அனைத்துவிதமான மருத்துவ உதவிகளை அளித்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் உடைகளை வழங்கி அவர்களை பத்திரமாக மீட்டு மாவட்டத்தின் தலைமை இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
 

மத்திய பிரதேசத்தில் கோர சம்பவம்: வதந்தியால் பக்தர்கள்


 மத்திய பிரதேச மாநிலத்தில் தசரா திருவிழாவுக்கு கூடிய பக்தர்கள் நெரிசல் ஏற்பட்டதால் அதில் சிக்கி 50 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் தாட்டியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கார் பகுதியில் துர்கை கோயில் உள்ளது. இங்கு தசரா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.

இன்றைய விழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் திரண்டதால் அம்மனை வழிபட சிந்து நதிக்கரையில் உள்ள இந்தக்கோயிலுக்கு பாலத்தின் மூலம் பலரும் நடந்து சென்றனர்.

இந்நிலையி்ல் பாலம் இடிந்து விழுந்ததாக வதந்தி பரவியதால் உயிர்தப்புவதற்காக பக்தர்கள் அங்கும், இங்கும் ஓடியுள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலை சமாளிக்க பொலிசார் லேசான தடியடி நடத்தியுள்ளனர்.
இதில் அச்சமுற்ற பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி சிதறி ஓடியதால் இந்த நெரிசலில் பலர் மிதிபட்டு இறந்தனர். சிலர் அருகில் உள்ள சிந்து நதியில் குதித்தனர்.

இது வரை 50 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளதால் இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் மீட்பு படையினர் நெரிசலில் சிக்கி, காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கவலையும், இரங்கலும் தெரிவித்துள்ளார்

மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்
களுக்கு தலா ஒன்றரை லட்சமும், காயமுற்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கபடுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
 

வெற்றிகரமாக கரையை கடந்த பைலின் புயல்


 
கடந்த 5 நாட்களாக இந்தியாவை அச்சுறுத்தி வந்த பைலின் புயல் பெரும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படுத்தாமல் நேற்று கரையை கடந்துள்ளது.

பைலின் புயலினால் பெரும் ஆபத்து என்று கடந்த 5 நாட்களாக வானிலை ஆய்வு மையமும் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையமும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் பைலின் புயல் நேற்றிரவு 7.55 மணிக்கு ஒடிசா மாநிலம் கோபால்பூர் பாரதீப் துறைமுகம் இடையே கரையைக் கடந்துள்ளது.
அப்போது 200 முதல் 220 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய காற்றால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததோடு, வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

மேலும் புயல் கரையை கடந்துள்ள போதிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஒடிசா மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்கள் இருளில் முழ்கிக் கிடந்தன. மேலும் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பைலின் புயலின் தாக்கம் இன்று வரை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

12 October 2013

உண்ணாவிரதத்தில் குதித்தனர் மாணவர்கள்!


தமிழின படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது, இலங்கையை அந்த மாநாட்டில் இருந்து வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும், அதையும் மீறி நடந்தால் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழீழத்திற்கான மாணவர்

 போராட்டக்குழுவினர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.இதையறிந்த போலீசார் 23 மாணவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
 

11 October 2013

வாணிகத்தில்வீழ்ச்சியை சந்தித்த தங்கம்!


 இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 ஆக குறைந்துள்ளது.
இன்று காலை நேர நிலவரப்படி ஒரு கிராம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2797 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.29910 ஆகவும் உள்ளது.
ஒரு சவரன் தங்கம் ரூ.144 குறைந்து ரூ.22,376க்கு விற்பனையாகிறது.
சில்லரை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.51.20க்கும், பார்வெள்ளி விலை ரூ.47,865க்கும் விற்பனையாகிறது.
 

கல்லூரி முதல்வரை கொன்றது ஏன்? மாணவர்கள் பரபரப்பு


எங்களை கல்லூரியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ததால் கல்லூரி முதல்வரை வெட்டிக் கொலை செய்தோம் என்று மாணவர்கள் மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நெல்லை அருகே கீழவல்லநாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரை 3 மாணவர்கள் நேற்று வெட்டிக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக மூன்று பேரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வாக்குமூலம் ஒன்றினை அளித்துள்ளனர்.
அதில், நாங்கள் மூன்று பேரும் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்தோம்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கல்லூரி பேருந்தில் வந்த சில மாணவிகளை கிண்டல் செய்ததால் சில மாணவர்கள் எங்களை கண்டித்தனர், இதனால் அவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டது.
இது சம்மந்தமாக கல்லூரி முதல்வர் சுரேஷ் எங்கள் மூவரையும் கண்டித்தார். இதற்கு காரணமான மாணவர்களுடன் கல்லூரி வளாகத்தில் மீண்டும் தகராறு செய்தோம்.
இதையடுத்து பிச்சை கண்ணனை, முதல்வர் கடந்த வாரம் கல்லூரியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்தார். இரு நாட்களுக்கு முன்பு பிச்சைகண்ணன் உட்பட நாங்கள் மூன்று பேரும் முதல்வரை சந்தித்து அதனை ரத்து செய்யும்படி வலியுறுத்தினோம்.
ஆனால் அவர் கண்டிப்புடன் பேசியதுடன், பிச்சை கண்ணனுக்கு ஆதரவாக செயல்பட்டால் எங்களையும் நீக்கம் செய்து விடுவதாக மிரட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். இதற்காக பாளை மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் அரிவாள், கத்தியை வாங்கினோம்.
பின்பு கல்லூரிக்கு காரில் வந்து இறங்கிய முதல்வரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தோம் என்று பொலிசில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
 

10 October 2013

ராகுல் காந்தி 2014-ல் இளைஞர்களின் அரசு பதவி ஏற்கும்:

 
2014-ல் இளைஞர்களின் அரசு பதவி ஏற்கும் என காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

நில ஆர்ஜித சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் போன்ற ஏழை மக்களுக்கான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நல்ல திட்டங்களை எதிர்க்கட்சிகள் முடக்க முயற்சித்தன.

ஆனால், இவற்றை எல்லாம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அர்ப்பணிப்புணர்வுடன் நிறைவேற்றி காட்டியுள்ளது.
இந்தியாவில் ஒருவர் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், ஏழைகளுக்கு உதவ வேண்டும். ஏழைகளின் மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சியினரோ ஏழைகளை சந்திக்க போவதே இல்லை. மாறாக,

ஊடகங்கிளில் பேட்டி அளிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் நமது நாட்டில் வெறும் வயிற்றுடன் பட்டினியாக தூங்கிய நிலைமையை உணவு பாதகாப்பு சட்டம் மாற்றியுள்ளது. இதைவிட பெரிய முன்மாதிரி திட்டம் எதுவும் வந்தவிட முடியாது.

இந்த திட்டத்தை கொண்டுவர பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் சேர்ந்து நானும் 3 ஆண்டுகளாக போராடினேன். அரை ரொட்டி சாப்பிடுங்கள். காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்துங்கள் என்ற முழங்கங்கள் மாறி எங்கள் வயிறு நிறைந்திருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் நிலைத்திருக்கும் என்ற முழக்கம் உருவாகியுள்ளது.
2014-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஏழைகள் மற்றும் சாமான்ய மக்களுக்கான ஒரு அரசு மீண்டும் அமைவதை நீங்கள் பார்க்கதான் போகிறீர்கள்.

அந்த அரசு இளைஞர்களின் அரசாக இருக்கும். அந்த அரசு நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும். வரிசையில் நிற்கும் கடைசி நபருக்கும் அதிகாரமளிக்கும் வகையில் அந்த மாற்றம் இருக்கும் என அவர் தெரிவித்தார்