Pages

27 October 2014

வரதட்சணை கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒரு பெண், அவளுடைய கணவராலோ அல்லது அவருடைய குடும்பத்தினராலோ சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டு வரை ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்க இ.பி.கோ. 498 ஏ பிரிவு வகை செய்கிறது. ஆனால், சமீபகாலமாக வரதட்சணை கொடுமை புகார்கள் அதிகரித்து வருகின்றன என்றும், இந்த சட்டம், மனைவிமார்களால் கேடயமாக பயன்படுத்தப்படாமல், ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாகவும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
எனவே, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கவனமுடன் பின்பற்ற வேண்டும். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
அதன்படி, இ.பி.கோ. 498 ஏ பிரிவின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவரை தன்னிச்சையாக கைது செய்யக்கூடாது என்று அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். கைது செய்வதற்கான அவசியம் உள்ளதாக போலீஸ் அதிகாரிகளே திருப்தி அடையும் வகையில் காரணங்கள் இருந்தால்தான் கைது செய்ய வேண்டும். அந்த காரணங்கள் அடங்கிய பட்டியலை, போலீஸ் அதிகாரிகளுக்கு மாநில அரசுகள் அளிக்க வேண்டும்.
வழக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குள், குற்றம் சாட்டப்பட்டவர் நேரில் ஆஜராவதற்கான நோட்டீசு அனுப்பப்பட வேண்டும். அந்த கால அவகாசத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் குறிப்பிட வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதில்லை என்ற முடிவை இரண்டு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டுக்கு போலீஸ் அதிகாரி தெரிவிக்க வேண்டும். அந்த கால அவகாசத்தை போலீஸ் சூப்பிரண்டு நீட்டித்துக் கொள்ளலாம். அதற்கான காரணத்தையும் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்.
இந்த உத்தரவை பின்பற்ற தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் மீது சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டு முன்பு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்.
மேலும், இத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது, போலீஸ் அதிகாரியின் அறிக்கையை ஆய்வு செய்து, மேற்கூறிய காரணங்கள் உள்ளதா என திருப்தி அடைந்த பிறகே, அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட வேண்டும்.
ஆனால், இந்த காரணங்கள் இல்லாமல் காவலில் வைக்க உத்தரவிட்டால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு மீது ஐகோர்ட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

No comments:

Post a Comment