Pages

30 June 2013

வெடித்த நிலையில் தரையிறங்கிய இலங்கை விமானம்!


 
இலங்கை அரசுக்கு சொந்தமான போயிங் 737 விமானம் ஒன்று நேற்றிரவு 7 மணியளவில் புதுடில்லி விமான நிலையத்தின் மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
70 பயணிகளுடன் வந்த அந்த விமானத்தை ஓடுபாதையில் இறக்கிய விமானிகள் சக்கரங்களின் 'பிரேக்' பிடிக்கவில்லை என்று கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, அந்த விமானத்தை பாதுகாப்பாக இழுத்து வருவதற்கான ஏற்பாடுகளை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தனர்.
இலங்கை விமானத்தின் அருகே சென்று பார்த்த போது 2 டயர்களும் வெடித்து இருந்தது தெரிய வந்தது.
காற்று இல்லாத டயருடன் விமானத்தை இழுத்து வருவது ஆபத்து என்பதால் பயணிகள் அங்கேயே இறங்கவைத்து அவர்களை பஸ்களின் மூலம் விமான நிலைய கட்டிடத்திற்கு அதிகாரிகள் அழைத்து வந்தனர்.
விமானி தக்க நேரத்தில் தகவல் தெரிவிக்காமல் இருந்தால் டயர் வெடித்த அந்த விமானம் ஓடுபாதையில் தாறுமாறாக ஓடி பெரிய விபத்தை ஏற்படுத்தி இருக்கும்.
இலங்கை விமானம் ஓடுபாதையின் குறுக்கே நின்றதால் மற்ற விமானங்கள் எல்லாம் மாற்று ஓடுபாதை வழியாக திருப்பி விடப்பட்டன.
புதிய சக்கரங்கள் பொருத்தப்பட்ட பின்னர் அந்த விமானம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் கூறினர்

29 June 2013

இந்தியாவை சமாதானப்படுத்த புதுடில்லிக்கு ஓடும் பசில்!


  சிறிலங்காவின் சமகால அரசியல் நடவடிக்கையால் இந்தியா பெரும் அதிருப்தி அடைந்துள்ளது.
   இந்நிலையில் குழம்பிப்போயுள்ள இந்தியாவுடன் பேச்சு நடத்தி, சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமைச்சர் பசில் ராஜபக்ச அடுத்தவாரம் புதுடில்லிக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்த சிறிலங்கா அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இந்தியா கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ள நிலையிலேயே பஸில் ராஜபக்சவை புதுடெல்லிக்கு அனுப்பும் முடிவை ஜனாதிபதி மஹிந்த  எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   அடுத்தமாதம் 4ஆம் திகதி பசில் ராஜபக்ஷ புதுடெல்லி செல்லவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
   நாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து அவர் இந்தியத் தலைவர்களுக்கு எடுத்து விளக்கவுள்ளார்.
   இதேவேளை அடுத்த மாதம் ஏழாம் திகதி கொழும்பு வரவுள்ள இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், 13வது திருத்தச்சட்ட விவகாரம் குறித்து சிறிலங்கா தரப்புடன் பேசுவார் என்று இந்தியத்தரப்பில் அறிவிக்கப்பட்டுள் நிலையில் பசில் ராஜபக்ஷவின் விஜயம் அமைந்துள்ளது

 

27 June 2013

பாதிக்கப்பட்ட நபரின் தோள் மீது அமர்ந்து கொண்டு செய்தி,


 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தோளில் அமர்ந்து கொண்டு செய்தி சேகரித்த பத்திரிக்கையாளருக்கு வேலை பறிபோனது.
சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக பிரபல தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளராக வேலை செய்து வருகிறார் நாராயண் பார்ஜியன்.
இந்நிலையில் இவர் வெள்ளம் பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக உத்தரகாண்ட் சென்றார்.
அங்கு சென்று பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் தோளில் அமர்ந்து கொண்டு, செய்திகளை சேகரித்துள்ளார்.
இதனை யூடியூப்பில் யாரோ வெளியிட்டு விட, நாராயணுக்கு எதிர்ப்பு அதிகரித்தது. இதனால் வேலையும் பறிபோனது.
இதுகுறித்து அவர் கூறுகையில், என் மீதிருந்த மரியாதையில் நான் வேண்டாமென்று சொல்லியும் அந்த நபர் விடாப்பிடியாக என்னை தோளில் சுமந்தார்.
நாங்கள் அவருக்கு கொஞ்சம் பணமும், உணவும் கொடுத்திருந்தோம் அந்த நன்றியில் இப்படி செய்துவிட்டார், அதோடு இது அந்த கேமராமேனின் குற்றம்தான், அவர் என்னை மாட்டிவிடுவதற்காக இப்படி பண்ணிவிட்டார் என கூறி புலம்புகிறார்,{காணொளி},
 

ராஜ்யசபா தேர்தல்: கனிமொழி வெற்றி

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது.
வாக்குகள் இன்று மாலை எண்ணப்பட்டது.
இதில் 230 வாக்குகள் செல்லத்தக்கவையாக அறிவிக்கப்பட்டன, ஒரு வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது.
இதில் அ.தி.மு.க வேட்பாளர்கள் மைத்ரேயன், அர்ச்சுனன், ரத்தினவேல் மற்றும் லட்சுமணன் ஆகிய நான்கு பேரும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவும், தி.மு.க சார்பில் கனிமொழியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 

25 June 2013

மருத்துவம் சார் பட்ட படிப்புகள் விண்ணப்பங்கள் விற்பனை

சென்னை: பி.எஸ்சி.,நர்சிங் - பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவம் சார் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்ப விற்பனை, நேற்று துவங்கியது. பி.எஸ்சி.,நர்சிங்; பி.பார்ம்., - பி.பி.டி., - பி.ஓ.டி., - பி.ஏ.எஸ்.எல்.பி., (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல் படிப்பு) - பி.எஸ்சி., ரேடியாலஜி இமேஜிங் தொழில்நுட்பம் - பி.எஸ்சி., கதிர்வீச்சு தொழில்நுட்பம் ஆகிய, மருத்துவம் சார் பட்டப் படிப்புகள், சில குறிப்பிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.
நடப்பு, 2013-14ம் கல்வியாண்டில், இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்ப விற்பனை, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், நேற்று துவங்கியது. ஜூலை, 4ம் தேதி வரை விண்ணப்பம் தரப்படும். விண்ணப்பம் பெற விரும்புவோர், செயலர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை- 10 என்ற பெயரில், 350 ரூபாய்க்கு எடுக்கப்பட்ட டி.டி.,யை, கொடுத்து விண்ணப்பம் பெறலாம்.
எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., பிரிவினர், விண்ணப்ப கடிதத்துடன், சான்றொப்பம் இடப்பட்ட, ஜாதி சான்றிதழின் இரு நகல்களை கொடுத்து, விண்ணப்பத்தை இலவசமாக பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஜூலை, 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மொத்தம், 23 ஆயிரம் விண்ணப்பம் அச்சிடப்பட்டு உள்ளன. விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை, விண்ணப்பத்துடன் வழங்கப்படும் குறிப்பேட்டில் பெறலாம்.
இவ்வாறு, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.
விண்ணப்பதாரர்கள், மருத்துவம் சார் பட்டப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் உள்ளிட்ட விவரங்களை, www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தில் பெறலாம்.
குழப்பம் : மருத்துவம் சார் பட்டப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் குறித்த விவரத்தை, சென்னை மருத்துவக் கல்லூரி நிர்வாகம், நேற்று வெளியிட்டது. அதில், சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட, நான்கு அரசு மருத்துவக் கல்லூரி, 16 தனியார் கல்லூரி ஆகியவற்றில், பி.எஸ்சி., நர்சிங் படிப்பு வழங்கப்படுகிறது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் இணையதளத்தில், மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் 154 தனியார் கல்லூரியில், பி.எஸ்சி., நர்சிங் படிப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோல், பி.பார்ம்., - பி.பி.டி., ஆகிய படிப்புகளை வழங்கும் தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை குறித்து, சென்னை மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ள தகவல், பல்கலை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களில் இருந்து வேறுபடுகிறது

மணமகனுக்குப் பாடம் புகட்டிய மணமகள்


இந்தியாவின் ஒடிசாவில், குடிபோதையில், தள்ளாடியபடி மணமேடைக்கு வந்த மணமகனை, மணமகள் புறக்கணித்து வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது.
சப்பள்ளி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம், பர்வத் மல்லிக், 26, என்ற மணமகனுக்கும், 22 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மண்டபத்தில், மணமகள், மங்கல தருணத்திற்காக காத்திருந்த போது, மதுபானம் ஏராளமாக அருந்தியதால், தள்ளாடிய படி, மேடையில் ஏறினான், மணமகன் பர்வத்.
இதைப் பார்த்த மணமகள், கழுத்தில் போட்டிருந்த மாலையை கழற்றி, வீசி எறிந்து விட்டு, மேடையை விட்டு கீழிறங்கினாள். "திருமண நாள் அன்றே மது அருந்தி, சுயநினைவு இல்லாமல் இருக்கும் இவனை திருமணம் செய்ய மாட்டேன்' என தெரிவித்து, தன் உறவினர்களுடன் வெளியேறினாள்.
இதை அறிந்த பொலிஸ் மற்றும் மகளிர் அமைப்புகள், மணமகன் குடும்பத்தினரை கண்டித்தனர்.

சீன பெண்ணை கரம் பிடித்த தமிழக வாலிபர்




இந்து முறைப்படி சீன பெண்ணை கரம் பிடித்தார் தமிழக வாலிபர் ஒருவர்.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த தொப்பையன்குளத்தை சேர்ந்தவர் வாசுதேவன், விவசாயி.
இவரது மகன் வெங்கடேசன்(வயது 29), கேட்டரிங் படித்தவர்.
இவர் 6 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டில் குவைஹவா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மின்ஹால்-குவாயின் மகள் ஷியாகுவ்வா(வயது 28) என்பவரை காதலித்தார்.
இதனையடுத்து கடந்தாண்டு ஏப்ரல் 6ம் திகதி பதிவுத் திருமணம் செய்து கொண்டு இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வெங்கடேசனின் பெற்றோர், இந்து முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதால், இருவரும் தமிழகம் வந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை 7:15 மணிக்கு ஷியாகுவ்வா கழுத்தில் வெங்கடேசன் தாலி கட்டினார்.
வெங்கடேசன் கூறுகையில், சைனீஸ் மொழி சரளமாகவும், ஆங்கிலம், ஹிந்தி கொஞ்சமாகவும் பேச தெரியும்.
சீன பெண்ணை மணந்ததால் என் பெற்றோர் வருத்தப்பட்டனர்.
பெண்ணுக்கு சீன மொழி மட்டுமே தெரியும். அதனால் உறவினர்களுடன் பேச முடியவில்லை, அது தான் வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்
 

24 June 2013

உத்தரகாண்டில் மீண்டும் தொடர் மழை: மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டது

 இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதுடன்  நாளை முதல் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.

அங்கு மீண்டும் தொடரும் மழை காரணமாக கருமேக மூட்டமாக உள்ளது. இதனால் ஹெலிகாப்டர்கள் மூலம் நடந்து வந்த மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கேதர்நாத்தில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதனால் வெண் புகை சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக இன்று கேதர்நாத்துக்கு ஒரு ஹெலிகாப்டர் கூட செல்லவில்லை. நாளை பலத்த மழை தொடங்குவதற்குள் எல்லோரையும் மீட்டு விட வேண்டும் என்று நினைத்த போதிலும் 74 ஆயிரம் பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.
இன்னும் 22 ஆயிரம் பேர் தவித்தப்படி அங்கு உள்ளனர். கேதர்நாத்தில் மட்டும் இன்னும் 500 பேர் மீட்கப்படாமல் உள்ளனர்.
இதற்கிடையே மலைப் பகுதிகளில் வேறு எங்காவது மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை ஆள் இல்லா குட்டி விமானத்தை அனுப்பி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 25, 26, 27-ந்தேதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை இலாகா கூறியுள்ளதால் உத்தரகாண்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு பேரழிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

 


 

23 June 2013

கார் மோதிய விபத்தில் தாய்-மகள் பலி,,



வேலூர் மாவட்டம் மேல்மலையனூர் அருகே சென்னை- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த கார் மோதியதில்இந்திரா என்ற பெண்ணும், அவரது மகள் ஷாலினி என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதையடுத்து கார் டிரைவரை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானில் பிரபல நடிகை மீது ஆசிட் வீச்சு


பாகிஸ்தானில் சினிமா நடிகை ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த நடிகை புஷ்ரா(வயது 18), திரைப்படங்கள் உட்பட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு அவரது இல்லத்தில் உறங்கி கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து, புஷ்ரா முகத்தில் ஆசிட்டை ஊற்றியுள்ளான்.
இதனையடுத்து புஷ்ரா உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவர்கள், புஷ்ராவின் முகம், கழுத்து ஆகியவற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவரது சகோதரர் அளித்த புகாரில், உள்ளூர் நாடக தயாரிப்பாளர் ஒருவர் புஷ்ராவை மணந்து கொள்ள விரும்பியதாகவும், ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்ததால் அவர் தான் இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 

22 June 2013

காங்கிரஸை தோற்கடிக்க பாஜகாவுக்கு புதிய கட்சிகள்?


மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகாவுடன் இணைந்து காங்கிஸ் கட்சியினை தோற்கடிப்பதற்கு புதிய கட்சிகள் தேவை என அத்வானி தெரிவித்துள்ளார்.
 டில்லியில் நடைபெற்ற ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 61 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அத்வானி கூறுகையில், ஜனசங்கத்தின் முதல் தேசியக் குழுக் கூட்டமானது 1952-ல் கான்பூரில் நடைபெற்றது.
அப்பொழுது ஒடிசாவைச் சேர்ந்த மாநிலக் கட்சியான கணதந்திர பரிஷத்தின் தலைவர்களை அக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சியாமா பிரசாத் முகர்ஜி அழைப்பு விடுத்தார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் அவர் பேசினார் என்பதை இன்று நான் உணர்ந்து கொள்கிறேன்.
1952-ல் அவர் கூறியது இன்றைய சூழலுக்கு நிச்சயம் பொருந்தும், எனவே மக்களவைத் தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடிப்பதற்கு புதிய கட்சிகள் எங்களுடன் இணைய வேண்டும் என கூறினார்.
 

ஆபாசமாக பேசிய முதலமைச்சர் அலுவலக ஊழியர்


திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில், தொலைபேசி அழைப்புகளை பெறும் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணியாற்றி வந்தவர் கே.பி.கிரீஷ் குமார்.
தனது குறையை தெரிவிப்பதற்காக முதல்-மந்திரி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண்ணிடம் கே.பி.கிரீஷ் குமார் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கை வந்ததை தொடர்ந்து கே.பி.கிரீஷ் குமார் வேலையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் என்ற பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியதாக உம்மன்சாண்டியின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது, அவரது அலுவலக ஒப்பந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கொலை செய்யும் கணவன்மார்கள்: அதிர்ச்சி


40 முதல் 100 சதவீத இந்திய மனைவி கொலை செய்யப்பட்ட வழக்குகளில் பெரும்பாலும் கணவன்மார்கள் தான் குற்றவாளிகளாக உள்ளனர் என பிரித்தானிய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு லண்டனில் உள்ள சுகாதார பள்ளி மற்றும் தென் ஆப்பிரிக்க ஆராய்ச்சி நிலையம் உதவியுடன், உலக சுகாதார நிறுவனத்தால் மேற் கொள்ளப்பட்டது.
பெண்களின் மீதான வன்முறை சர்வதேச அளவில் எப்படி இருக்கிறது என்பது ஆய்வின் கருவாகக் கொள்ளப்பட்டது.
அதில், மணமான பெண்கள் மீதான வன்முறையில் அவர்களின் கணவர் அல்லது முன்னாள் கணவரின் பங்களிப்பே அதிக அளவில் இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதுது.
இதில் குறிப்பாக, இந்தியர்களின் நிலை தான் மிகவும் மோசமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

20 June 2013

தம்பதி கடத்தல் தொடர்பில்??

 
 ஆசிரியை உள்பட 8 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது 
இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை தம்பதி களான தவராஜா, ஜலஜா ஆகியோர் கடந்த மே 25ம் திகதி சென்னை வந்த போது விமான நிலையத்திலிருந்து மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது.

கடத்தியவர்கள் இங்கிலாந்தில் இருந்த தவராஜா மகள் தர்ஷினியிடம் ரூ.2 கோடி கேட்டு போனில் மிரட்டினர்.
போலீசார் தனிப்படை  அமைத்து தீவிர விசாரணை நடத்தி கடலூர் அடுத்த மந்தாரக்குப்பத்தில் ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருந்த தவராஜா ஜலஜாவை மீட்டனர்.
அவர்களை கடத்திய கண்ணன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை இந்திரா அந்தோணிமேரி, பிரபு, மதியழகன், சரவணன், சதீஷ்குமார், இளங்கோ இலங்கையை சேர்ந்த வசந்த் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
இந் நிலையில் கைதான 8 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வடக்கு மண்டலம் கூடுதல் கமிஷனர் தாமரை கண்ணன் பரிந்துரைந்தார்.
இதை ஏற்று சென்னை போலீஸ் கமிஷனர் 8 குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து 8 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.



.


 

இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் வீழ்ச்சி


சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.60 ஐ எட்டி உள்ளது.
இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின்போது ஒரே நாளில் 130 காசுகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு ரூ.58.71 ஆக இருந்தது
 

18 June 2013

மத்திய அமைச்சரவை மாற்றம்: 8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு


   ரயில்வே அமைச்சராக மல்லிகார்ஜுன கார்கேவும், புதிதாக 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.

 குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை மாலை புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆஸ்கர் பெர்னாண்டஸ், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிரிஜா வியாஸ், சிஸ்ராம் ஓலா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கே. சாம்பசிவ ராவ் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

 தமிழகத்தைச் சேர்ந்த இ.எம். சுதர்சன நாச்சியப்பன், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மாணிக்ராவ் கேவிட், ஆந்திரத்தைச் சேர்ந்த ஜேசுதாசு சீலம், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் செüத்ரி ஆகியோர் இணையமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 கார்கேவுக்கு ரயில்வே: மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு ரயில்வே துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் முன்பு வகித்து வந்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை பொறுப்பு, சிஸ்ராம் ஓலாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 திமுக வசம் இருந்த பொறுப்பு காங்கிரஸிடம்: கடந்த மார்ச் மாதம் மத்திய அரசுக்கு அளித்த வந்த ஆதரவை திமுக வாபஸ் பெற்றது. அப்போது, திமுக வசம் இருந்த நான்கு இணையமைச்சர்களின் பதவிகள் தற்போது காங்கிரஸ் அமைச்சர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
  ஜெகத்ரட்சகன் வகித்து வந்த வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் பதவி தற்போது சுதர்சன நாச்சியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2004 முதல் 2013-ஆம் ஆண்டு வரை பழனிமாணிக்கம் வகித்து வந்த மத்திய நிதித் துறை இணையமைச்சர் பதவி ஜேசுதாசு சீலமுக்கும், காந்தி செல்வன் வகித்து வந்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சர் பதவி சந்தோஷ் செüத்ரிக்கும், நெப்போலியின் வகித்து வந்த சமூக நீதித் துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை மாணிக்ராவ் கேவிட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  மு.க. அழகிரி வகித்து வந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர பதவி, அத்துறை இணையமைச்சராக உள்ள ஸ்ரீகாந்த் ஜனாவிடமே (தனிப்பொறுப்பு) உள்ளது. அதில், மாற்றம் செய்யப்படவில்லை.
  தமிழகத்துக்கு வாய்ப்பு: புதிய அமைச்சர்கள் பட்டியலில் தமிழகம், பஞ்சாப், ராஜஸ்தான், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிதாகப் பதவியேற்ற 8 அமைச்சர்களில் 2 பேர் பெண்கள் ஆவர்.
  சுதர்சன நாச்சியப்பன் 1999-ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானர். பின்னர் 2010-ல் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, அவருக்கு முதல் முறையாக மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞராக அவர் பணியாற்றி உள்ளார். மனித உரிமைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பை நிறுவி நிர்வகித்தும் வருகிறார்.

 கேபினட் அமைச்சர்கள்
  ஆஸ்கர் பெர்னாண்டஸ் - மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
 சிஸ்ராம் ஓலா - மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்
  கிரிஜா வியாஸ் - மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர்
  சாம்பசிவ ராவ் - மத்திய ஜவுளித் துறை அமைச்சர்
  சுதர்சன நாச்சியப்பன் - வர்த்தகம் மற்றும் தொழில் துறை
  சந்தோஷ் செüத்ரி -  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை
  ஜேசுதாசு சீலம் - நிதித் துறை
  மாணிக் ராவ் கேவிட் - சமூக நீதித் துறை மற்றும் அதிகாரமளித்தல்

 

பருவமழை பல மாநிலங்களில் வெறியாட்டம்: டில்லி, மும்பை, திருவனந்தபுரத்தில் கடும் பாதிப்பு


 
தமிழகத்தை மட்டும் பாராமுகமாக இருக்கும் தென் மேற்கு பருவமழை, நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக பெய்து, அப்பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், பல மாநிலங்களில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. "மழை தொடரும்' என, அறிவிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
  இம்மாதம், 1ம் தேதி துவங்கிய தென் மேற்கு பருவமழை, முதலில் கேரளாவில் துவங்கி, தமிழகத்தின் தென் மாவட்டங்களை குளிர்வித்து, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா என, பிற மேற்கு மாநிலங்களுக்கு சென்று விட்டது. இரண்டு நாட்களுக்கு முன், டில்லியில் பருவமழை பெய்யத் துவங்கியதை அடுத்து, நாடு
 முழுவதும், பருவமழை பெய்து விட்டதாக, தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 டில்லி : தலைநகர் டில்லியில், கடந்த நான்கு மாதங்களாக, கொளுத்தி எடுத்த வெயில், இரண்டு நாள் தொடர்ந்து பெய்த மழையால் காணாமல் போனது. நேற்று முன்தினம் அதிகாலை துவங்கி, நேற்று இரவு வரை, இடைவிடாது மழை பெய்ததால், குளிர்ச்சியான சீதோஷ்ணம் பொதுமக்களை வருடியது.
 எனினும், திடீரென வானம் பொத்துக்கொண்டு கொட்டும் என எதிர்பார்க்காததால், முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாததால், வெள்ளமென சாலைகளில் மழை நீர் ஓடியது. இதனால், பாதசாரிகளும், பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலத்த மழையால், சர்வதேச விமான நிலையத்தின் இயல்பான பணிகளும் முடங்கின.

 மும்பை : கடந்த மூன்று நாட்களாக, தென் மேற்கு பருவமழை, தன் வெறியாட்டத்தை காட்டியதால், மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. தொடர்ந்து மழை பெய்த வண்ணமாக இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகரின் நரம்புகள் போல இயங்கும், ரயில்கள் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளியிடங்களுக்கு செல்லும் ரயில்கள் மட்டுமின்றி, மாநகருக்குள் பயணிக்கும் ரயில்களும், 4 மணி நேரம் முதல், 6 மணி நேரம் வரை தாமதமாக இயங்கின. பலத்த வேகமாக காற்றடிப்பதால், சாலைகளில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளன. வரும் நாட்களில், இன்னும் மழை தீவிரம் அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மட்டுமின்றி, மகாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களிலும், பரவலாக பருவமழை பெய்து வருகிறது.

 இமாச்சல் : இமாச்சல பிரதேசத்தில், கடந்த, ஐந்து நாட்களாக இடைவிடாது, பலத்த மழை பெய்கிறது. இதனால், மலைகள் சூழ்ந்த அந்த மாநிலத்தில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
 வெயிலில் இருந்து தப்பிக்க, அந்த குளுகுளு மாநிலத்திற்கு வந்த, 1,000த்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், வெளியிடங்களுக்கு செல்ல முடியாத வகையில், நிலச்சரிவும், சாலை துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது.

 முதல்வர் தவிப்பு : மண்டி லோக்சபா இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் வீரபத்ர சிங், அந்த பகுதியை விட்டு வெளியேற முடியாமல் தவித்தார். ஹெலிகாப்டர்களும் இயக்க முடியாத அளவிற்கு, பலத்த மழை கொட்டியால், கங்கை நதி மற்றும் அதன் கிளை ஆறுகளில், கரைகளே தெரியாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 உத்தரகண்ட் : நான்கு நாட்களாக பலத்த மழை பெய்து வரும் உத்தரகண்ட் மாநிலத்தில், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனாத்ரி, ரிஷிகேஷ் போன்ற புனித தலங்களுக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் சொல்லொண்ணா துயரம் அடைந்துள்ளனர். எங்குமே நகர முடியாத அளவிற்கு, மழை வெளுத்து வாங்குகிறது. இதனால், புனிதமான, சார் தாம் யாத்திரை நிறுத்தப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில், இந்தோ - திபெத் எல்லை போலீசார் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 அரியானா : பஞ்சாப், அரியானா மற்றும் இரு மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில், விடாது மழை பெய்து வருகிறது. அரியானாவில், யமுனை நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், யமுனா நகர் பகுதியில், 52 பேர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்; அவர்களை, ராணுவத்தினர் மீட்டனர். விமானப்படை ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு, இரண்டு நாட்களாக, தண்ணீரில் தத்தளித்த பொதுமக்கள் பத்திரமாக
 மீட்கப்பட்டனர்.

 திருவனந்தபுரம் : தென் மேற்கு பருவ மழை துவங்கிய, கேரளாவில், கடந்த, 16 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், மாநிலமே முடங்கியுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு, வீடுகள் இடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது; மழைக்கு பலர் பலியாகியுள்ளனர்; பல விதமான காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் தலைநகர், திருவனந்தபுரத்தில், தேசிய பேரழிவு எதிர்ப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட உள்ளனர். நாடு முழுவதும், 50க்கும் மேற்பட்டோர், மழைக்கு பலியாகி உள்ளதாக,
 தகவல்கள் தெரிவிக்கின்றன

 

07 June 2013

500 அடி பள்ளத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்த பஸ்:


இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் 500 அடி பள்ளத்தில் பஸ் ஒன்று கவிழ்ந்ததில் எட்டுப்பேர் பலியாகியுள்ளனர்.
சிர்மாவூர் மாவட்டம் புன்ரதாரில் இருந்து 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை அரச பஸ் ஒன்று சோலன் நோக்கி புறப்பட்டது.
5 கி.மீட்டர் தூரம் சென்றதும், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் உள்ள 500 அடி பள்ளத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியிருந்த எட்டுப் பேரின் சடலங்களை மீட்டனர்.
மேலும் உயிருடன் மீட்கப்பட்ட சிலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்சினுள் சிக்கியுள்ள மேலும் சிலரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேவேளை பஸ்சினுள் மேலும் சிலர் உயிரிழந்து இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
 

இணைந்து வாழ்ந்த தம்பதி படுகொலை



திருமணம் செய்யாமல் இணைந்து  வாழ்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட தம்பதி படுகொலை செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் கோவளப் பகுதியை சேர்ந்தவர் திவாகரன்(வயது 70). இவர் திரேசம்மாள் என்ற 76 வயது மூதாட்டியுடன் தனியாக வசித்து வந்தார்.
35 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் தங்களது குடும்பம், குழந்தைளை விட்டுப் பிரிந்து வந்து வாழத் தொடங்கினர்.
திருமணம் செய்து கொள்ளாமலேயே இணைந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதி, கோட்டக்கல் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர்.
சில நாட்களாக இவர்கள் இருந்து வந்த வீடு திறக்கப்படாமல் இருந்ததுடன், வீட்டிலிருந்து துர்நாற்றமும் வந்தது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது இருவரும் பிணமாக கிடந்தனர்.
அப்போது, உடலில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. ரத்தம் வழிந்தோடி உறைந்து கிடந்தது.
ஏன் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்துத் தெரியவில்லை. வீட்டில் திருட்டு போகவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே கொலை செய்திருக்கலாமோ என்று பொலிஸார் சந்தேகப்படுகின்றனர்
 

பிரதமராகி இந்திய தேசத்தை காக்க வேண்டும்:


 தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரத பிரதமராக வந்து இந்திய தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய நாஞ்சில் சம்பத், பென்னிகுயிக்கிற்கு நினைவகம் அமைத்து உலக அளவில் ஜெயலலிதா இன்று போற்றப்படுகிறார்.
மதிமுகவுக்காக 18 ஆண்டுகள் உழைத்தேன், அன்று பலனில்லை.
கடந்த செப்டம்பர் முதல் நான் ஒரு முழு அரசியல்வாதியாக, கடைசி தொண்டனாக தமிழக முதல்வரால் உருவாக்கப்பட்டேன்.
சாதனைகள் படைக்கும் தமிழக முதல்வர் வழியில் செல்வோம். ஜாதியை தூண்டி விட்டு அரசியலாக்க முயன்றவர் பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ். அதை முறியடித்தவர் தமிழக முதல்வர்.
கருணாநிதி குடும்ப அரசியல் நடத்தி குடும்ப உறுப்பினர்களை அமைச்சராக்கினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு மக்கள் மனதிலும், மாணவர் மத்தியிலும் மாபெரும் நம்பிக்கை கொண்டுள்ளது.
உலகம் போற்றும் தலைவராகவும், வரலாறு கூறும் முதல்வராகவும் ஜெயலலிதா திகழ்கிறார்.
அவர் பாரத பிரதமராக வந்து இந்திய தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

 

8 வயது சிறுமியை சீரழித்த 14 வயது மாணவன்: உறவினர்கள்



புதுச்சேரியில் 8 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி.
இவருக்கு நாராயணன் என்ற 10 வயது மகனும், சுமதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 8 வயது மகளும் உள்ளனர்.
இவர்கள் இருவரும் மணவெளியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
கணவர் இல்லாத தமிழ்செல்வி கூலித் தொழில் செய்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு சிறுவன் நாராயணன் தனது தங்கை சுமதியை அழைத்து கொண்டு கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது மணவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் பிரகாஷ் என்ற மாணவன், நாரயணனையும் சுமதியையும் நிறுத்தி பேச்சு கொடுத்துள்ளான்.
நாராயணனை மட்டும் கடைக்கு போக சொல்லிவிட்டு சுமதியை யாரும் இல்லாத மறைவிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இந்த சம்பவத்தை சுமதி அழுது கொண்டே தனது தாய் தமிழ்செல்வியிடம் கூறியிருக்கிறார். அதையடுத்து தமிழ்செல்வி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் அரியாங்குப்பம் பொலிசார் பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமி சுமதியை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கோரி உறவினர்களும் அந்த பகுதி பொதுமக்களும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
 

06 June 2013

ஒரு கோடி ரூபா நலத்திட்ட நிகழ்வு ரத்து: அதிருப்தியில்


நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி ஒரு கோடி ரூபா நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் விஜய்  3 ஆயிரத்து 900 ஆயிரம் ஏழைகளுக்கு நல உதவிகள், ஏழை மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, கணனிகள், ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள் போன்றவற்றை வழங்குவதாக இருந்தது.
இவ்விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை புறப்பட தயாரானார்கள். விழாவுக்காக மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதா னத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்தன.
ரசிகர்கள் விஜய்யின் கட்-அவுட்களையும் அமைத்து வந்தனர். இந்த நிலையில் இன்று இவ்விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் இதுகுறித்து கூறும்போது,
எதிர்வரும் 8-ந்தேதி நடக்கவிருந்த விஜய் ஒரு கோடி ரூபா நலத்திட்ட பணிகள் வழங்கும் விழா ரத்தாகியுள்ளது. எனவே வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் யாரும் சென்னை வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு இந்த விழா அடித்தளம் என்று பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ரத்தாகியுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்
 

எல்லையில்லா அன்பை பார்த்து தூக்கம் வரவில்லை:


தமிழக மக்கள் என்னிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எல்லையில்லாத அன்போடு இருக்கிறார்களே என்று எண்ணிக் கொண்டிருந்ததால் தூங்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது 90-ஆம் பிறந்த நாள் விழாவினை, எந்த ஆண்டும் இல்லாத வகையில் மிகவும் சிறப்பாக திமுகவினர் ஒருங்கிணைந்து கொண்டாடினர்.
3 நாள்களாக நான் சரியாகத் தூங்கவில்லை. தமிழக மக்கள் என்னிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எல்லையில்லாத அன்போடு இருக்கிறார்களே என்று எண்ணிக் கொண்டிருந்ததால் தூங்கவில்லை.
எங்கோ ஒரு கிராமத்தில், அதுவும் மிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். முரசொலிமாறன் தான் எங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி.
எங்கள் குடும்பத்துக்கு என்று தனிப்பட்ட எந்தப் பெருமையும் கிடையாது.
ஆனாலும் 5 முறை முதல்வராகவும், 12 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியே பெறாமல் வெற்றி பெற்றிருக்கிறேன். அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-ஆம் ஆண்டிலிருந்து திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறேன்.
தமிழகத்தின் 7 கோடி மக்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே என்னை எதிரியாகக் கருதக் கூடியவர்கள். மற்றவர்கள் எல்லோரும் என்னிடம் அன்பு காட்டியிருக்கின்றனர்.
இந்தப் பெருமைக்கெல்லாம் காரணம் என் உழைப்புதான். மாநிலக் கட்சிகளில் ஒன்றின் தலைவராக இருந்த போதிலும், என்னை அறிந்துகொள்ளாத அகில இந்திய தலைவர்கள் இல்லை எனும் அளவுக்குப் பழகியிருக்கிறேன்.
இந்திரா காந்தி முதல் கொண்டு அனைத்து பிரதமர்களுடன் பழகியிருக்கிறேன். யாரும் என்னிடம் வெறுப்புக் காட்டும் அளவுக்கு நடந்தது இல்லை.
இத்தனைக்குப் பிறகும் நான் அகம்பாவம் கொண்டதில்லை. யாரையும் அலட்சியமாக நடத்தியதுமில்லை. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசியதில்லை. இவ்வளவு பேர் செலுத்தும் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்பதுதான் 3 நாள்களாக என்னைத் தூங்கவிடாமல் எழுந்த கேள்வியாகும்.
இதற்குச் சொல்லும் பதில் தொடர்ந்து உழைப்பேன். உழைத்துக் கொண்டிருப்பேன் என்று தெரிவித்துள்ளார்
 

தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம்: இந்திய நிதியமைச்சு


 வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய நிதியமைச்சகம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியது.
இதனால் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற இந்திய வங்கிகள் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
தங்கம் இறக்குமதி சீரற்ற முறையில் உள்ளது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தங்கத்தின் மீதான ஆர்வத்தை குறைப்பதற்கு வங்கிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். அனைத்து வங்கிகளும் தங்கள் கிளைகளில் தங்கம் வாங்க வேண்டும் என்றோ, தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றோ வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கக் கூடாது.
தங்க நாணயங்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று நான் ஏற்கனவே வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறேன். தாமிரம் மற்றும் வெண்கலத்தைவிட தங்கம் சற்று பளபளப்பான ஒரு உலோகம் என்று மக்கள் கருதும் நாள் வரும் என்று நம்புகிறேன்.
சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்திருப்பது இந்தியாவுக்கு மோசமான செய்தி என்று ரிசர்வ் வங்கி கவர்னரிடம் நான் கூறினேன். நமது பயம் இப்போது உண்மையாகிவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 142 டன்கள் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மே மாதம் 162 டன் இறக்குமதி ஆகியுள்ளது. கடந்த ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 70 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆணடு முதல் இரண்டு மாதங்களில் சராசரி 152 டன்னை எட்டியுள்ளது.
இப்படி இருந்தால் எப்படி தாங்க முடியும்? அந்த இறக்குமதிக்கான நிதியை எப்படி வழங்க முடியும்? உணவு பணவீக்கம் இப்போதும் அதிகரித்துள்ளது. ரபி பருவ அறுவடைக்குப் பிறகு அது குறையும் என நம்புகிறேன் என நிதியமைச்சர் மேலும் தெரிவித்தார்

05 June 2013

கொலை செய்யப்பட்டார் செல்லக் கதிர்காம பிரதம பூசகர்?

கதிர்காமம் சைவ சமயத்தவர்களின் புனித பிரதேசமாக இருந்து வந்தது. இதனை, படிப்படியாக சிங்கள மயமாக்கியது பௌத்த பேரினவாதம். மதகுருமாரும் பூசை முறைகளும் மாறிய போதும் இறைவிக்கிரங்கள் ஏதோவொருவகையில் இருந்து வந்தது.  இந்த நிலையில் செல்லக் கதிர்காமம் ஈஸ்வர ஆலயத்தின் பிரதம குருவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
 ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் காயங்களுடன் பிரதம குருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  இதேவேளை, சிங்கள பௌத்தம் தவிர்ந்த அனைத்து இனங்களினதும் மதங்களினதும் அடையாளங்களை அழிப்பதில் சிங்கள ராவய மற்றும் பொதுபல சேன போன்ற சிங்கள இனவெறி அமைப்புக்கள் தீவிரமாக செயற்பாட்டு வருகின்றன. இந்த அடிப்படையில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

04 June 2013

பள்ளிகளிலும் தமிழ்வழிக் கல்வி

 
சென்னை, நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரி வளாகத்தில் 01.06.2013 அன்று தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், சனநாயக ஆற்றல்கள் ஆகியோர் இணைந்து தமிழ்ச் சமுகக் கல்வி இயக்கம் சார்பாக தமிழ்ச் சமூகக் கல்வி இயக்கம், அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி - அரசு முடிவைக் கைவிடக் கோரி நடத்திய கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
தீர்மானம் : 1
வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தேவையான அளவு ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு கடும் கண்டனத்திற்குரியது. தமிழே தெரியாத ஒரு தலைமுறை எதிர்காலத்தில் உருவாக இது வழிவகுக்கும். மேலும் தாய்மொழி வழியாகக் கல்வி கற்பதே அறிவு வளர்ச்சிக்கு உகந்தது எனப் பல்வேறு உலக அறிஞர்களும் கல்வி வல்லுனர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை அமைக்கப்பட்ட எந்தவொரு கல்விக்குழுவும் ஆங்கிலவழிக் கல்வி வழங்குமாறு பரிந்துரைக்கவில்லை. தேசியக் கல்வி ஏற்பாடு (NCF) 2005 பயிற்றுமொழி, தாய்மொழி என்றே கூறுகிறது. 2009 கல்வி உரிமைச்சட்டம்கூட கூடுமானவரையில் தாய்மொழியே பயிற்றுமொழி எனக் கூறுகிறது. அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்விப் பிரிவு நடைமுறைப்படுத்தப்படும் எனும் அரசு அறிவிப்பு NCF 2005, RTE 2009 ஆகியவற்றிற்கு எதிராக அமைந்துள்ளது.
எனவே, அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவைத் தொடங்கும் முடிவைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இக்கருத்தரங்கு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 2
பள்ளிக்கல்வி மற்றும் பட்ட வகுப்புவரை தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு மட்டும் தற்பொழுது வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதை மாற்றியமைத்து +2 வகுப்புவரை தமிழ் வழியில் பயின்றவர்களைத் தமிழ்வழியில் கற்றவர்களாக வரையறுத்து அவர்களுக்குத் தமிழக அரசு, தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு என்பதை 80 விழுக்காடாக உயர்த்த வேண்டும். இதன் மூலம் மட்டுமே தமிழக மக்களிடையே தத்தம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை உருவாகும். ஆகவே, இதைச் சட்டமன்றத்தில் சட்டமாக இயற்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக்கருத்தரங்கு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 3
1999ஆம் ஆண்டு தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி 102 தமிழறிஞர்கள் நடத்திய சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்தின் விளைவாகத் தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புவரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அது உரிய பலனைத் தரவில்லை. ஆகவே அதே அரசாணையைச் சட்டமன்றத்தில் சட்டமாக்கி அதனைத் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசை இக்கருத்தரங்கு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 4
நாடு முழுவதும் சமமான வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பெறும் வகையில் ஒரே சீரான கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம். சமத்துவமான சமூகம் படைக்க விழையும் நமது அரசமைப்புச் சட்டம், குழந்தைகள் அரசின் பொறுப்பில் கல்வி உரிமையைப் பெற்றுப் பயன்பெறவே வழிகாட்டுகின்றது. முன்னேறிய, முன்னேறுகின்ற அனைத்து நாடுகளிலும் இம்முறையே நடைமுறையில் உள்ளது. எனவே, அனைத்துக் குழந்தைகளுக்கும் மேனிலைப்பள்ளிக் கல்வி வரை கட்டாயக் கட்டணமில்லாக் கல்வியை, அரசின் முழுப்பொறுப்பிலும் செலவிலும், தாய்மொழி வழியில், அருகமைப்பள்ளி அமைப்பில், பொதுப்பள்ளிமூலம் வழங்க அரசமைப்புச் சட்டம் மீண்டும் திருத்தப்பட வேண்டும். மேலும் தற்பொழுது பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, 1976க்கு முன் இருந்ததுபோல் மாநிலப் பட்டியலுக்குத் திரும்பக் கொண்டு வரப்பட வேண்டும் என்று இக்கருத்தரங்கு வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 5
அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்புப் பாடங்களை நடத்துவதும் +1 வகுப்பிலேயே +2 பாடங்களை நடத்துவதும் தனியார் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகத் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசு பள்ளிகளைவிட அதிக மதிப்பெண் பெற்று வருகின்றனர். போட்டித் தேர்வுக்குச் செல்லும்பொழுது உயர்கல்வியின் சவால்களைச் சமாளிக்க முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். கல்வியில் இத்தகைய அநீதியை ஒழிக்க ஆந்திராவில் உள்ளதுபோல +1 வகுப்பிலும் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று இக்கருத்தரங்கு வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 6
கல்வி குறித்து அரசின் பொறுப்பை வெளிப்படுத்தும் வகையில் முதல் கட்டமாக தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். பிறகு படிப்படியாகத் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசு பள்ளிகளாக மாற்றியமைக்க வேண்டும். அதே சமயத்தில் அரசு பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று இக்கருத்தரங்கு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 7
இட ஒதுக்கீடு இல்லாமல் இந்தியாவில் நடந்த முதல் பணியமர்த்தத் தகுதித் தேர்வு தமிழ்நாட்டில்தான் நடந்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற மாநிலங்களைப்போல தமிழ்நாட்டிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக்கருத்தரங்கு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 8
கல்வியில் மட்டுமல்லாது ஆட்சிமொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் ஆலயங்களில் வழிபாட்டு மொழியாகவும் கட்டாயமாகத் தமிழை முன்னிறுத்த அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களிலும் நடுவண் அரசு அலுவலகங்களிலும் தமிழை அலுவல் மொழியாக நடைமுறைக்குக் கொண்டுவரச் சட்டமியற்ற வேண்டும் என்று இக்கருத்தரங்கு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 9
ஆங்கிலம் மற்றும் இந்தி மேலாண்மை தமிழ்நாட்டின் மீதான இந்திய - பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலாகவும் தமிழினத்தின் மீதான ஒடுக்குமுறையாகவும் அமைந்துள்ளதென்று இக்கருத்தரங்கம் கருதுகிறது. ஆகவே, தமிழ் மக்கள் மீதான இந்திய - பன்னாட்டுச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக அணிதிரண்டு போராட முன்வரவேண்டுமென்று தமிழக மக்களை இக்கருத்தரங்கு அறைகூவி அழைக்கிறது.
தீர்மானம் : 10
தமிழ்வழிக் கல்வி குறித்து வலியுறுத்திக் கருத்துத் தெரிவித்த அனைத்து இயக்கங்களுக்கும் தமிழ்ச் சமூகக் கல்வி இயக்கம் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. எதிர்வரும் நாட்களில் தமிழ்வழிக் கல்வி குறித்த விழிப்புணர்ச்சியைப் பொதுமக்களுக்கிடையேயும் மாணவர்களிடையேயும் உருவாக்க அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தங்களது கட்சித் திட்டத்தின் முதன்மைச் செயல்திட்டமாகத் தமிழ்வழிக் கல்வியை இணைத்துக்கொள்ள வேண்டும். தத்தம் கட்சி சார்பாக இதுகுறித்துத் தமிழகமெங்கும் மக்கள் பேரணி, விழிப்புணர்ச்சிக் கருத்தரங்கு, பெருந்திரள் ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் போன்றவற்றை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இக்கருத்தரங்கு அன்போடு அழைக்கிறது

கொல்கத்தா அணிக்கு தொடர்பா?



கிரிக்கெட் சூதாட்ட வலையில் கொல்கத்தா அணியும் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் வெடித்த சூதாட்ட புகார் தொடர்பாக பாலிவுட் நடிகர் விண்டூ சிங் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன் பிடிபட்டார். தவிர கொல்கத்தா அணிக்கும் வலை விரித்துள்ளார்.
இது குறித்து மும்பை கிரைம் பிராஞ்ச் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கொல்கத்தா அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கியை தொடர்பு கொண்டு போட்டிகள் குறித்த முக்கிய விஷயங்களை பெற முயன்றதாக விண்டூ குறிப்பிட்டார்.
ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போதைக்கு வெங்கியிடம் விசாரணை நடத்தும் உத்தேசம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 

பிரபல நடிகை ஜியா கான் தற்கொலை


பிரபல பாலிவுட் நடிகை ஜியா கான் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் வெளியான கஜினி, அமிதாப் பச்சனின் நிசாபாத், அக்சய்குமாரின் ஹவுஸ்புல் உள்ளிட்ட இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜியாகான்(24).
மும்பை ஜூகூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று இரவு 11.45 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் பொலிசிற்கு தெரிவித்தார்.
இதையடுத்து ஜூகூ காவல் நிலைய பொலிசார், அவரது வீ்ட்டிற்கு சென்று, படுக்கையறையில் பேனில் தூக்கிட்டு பிணமாக தொங்கிய நிலையில் இருந்த நடிகை ஜியாகான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவம‌னைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறி்த்து பொலிசார் விசாரித்து வருகின்றனர். கடைசியாக ஜியாகான் மொபைலில் யாருடன் பேசினார், அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் யார் என்பதும் குறித்தும், அவரது வீட்டிற்கு கடைசியாக வந்து சென்றவர்கள் யார் என்பதும் குறித்தும் காவலாளியிடம் விசாரணை நடக்கிறது
 

03 June 2013

அமைச்சரவையில் மாற்றம்: மூத்த அமைச்சர்கள்.-


மத்திய மந்திரி சபையில் இருந்து கடந்த மார்ச் மாதம் தி.மு.க.வைச் சேர்ந்த மந்திரிகள் விலகினார்கள். இதையடுத்து கடந்த மாதம் ஊழல் புகார் காரணமாக ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சாலும், சி.பி.ஐ. அறிக்கையை திருத்திய விவகாரத்தில் சட்ட மந்திரி அஸ்வினிகுமாரும் பதவியை ராஜினாமா செய்தனர்.
தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மந்திரிகள் விலகலால் மத்திய அமைச்சரவையில் சில முக்கிய இலாகாக்கள் காலி இடங்களாக உள்ளன. இந்த காலி இடங்களுக்கு விரைவில் புதிய மந்திரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பும்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
இதையடுத்து புதிய மந்திரிகளாக யார், யாரை நியமனம் செய்யலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது. பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருப்பதால், காங்கிரஸ் மூத்த மந்திரிகள் சிலரை கட்சிப் பணிக்கு அனுப்புவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதும், மந்திரி சபை மாற்றம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்னதாக மந்திரிசபை மாற்றத்தை செய்ய பிரதமர் மன்மோகன்சிங் தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் இருவரும் 12-ந்தேதிக்குப் பிறகு ஜூன் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். எனவே மந்திரிசபை மாற்றம் வரும் 6-ந்தேதியில் இருந்து 12-ந்தேதிக்குள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மந்திரி சபையில் தற்போது பலர் கூடுதல் பொறுப்புகள் வகித்து வருகிறார்கள். இந்த பொறுப்புகள் பிரித்து கொடுக்கப்படும்போது, காங்கிரசை சேர்ந்த பலருக்கு மந்திரியாகும் வாய்ப்பு கிடைக்கும். மூத்த மந்திரிகள் கட்சிப் பணிக்கு செல்ல இருப்பதால் காங்கிரசைச் சேர்ந்த புதுமுகங்கள் சிலர் மந்திரி சபையில் இடம்பெற வாய்ப்புள்ளது
 

முகப்புத்தகத்தில் தோன்றிய ராணுவ ??


இஸ்ரேல் குடிமக்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்- பெண் இருபாலரும் அடிப்படையாக ராணுவத்தில் பயிற்சி பெற வேண்டும் என்னும் சட்டம் நடைமுறையில் உள்ளது.
இவ்வகையில், புதிதாக ராணுவ பயிற்சியில் இணைந்த 5 இளம்பெண்கள், மேலாடை இல்லாமல் தலைக் கவசம் மட்டும் அணிந்தபடியும், இடுப்புக்கு கீழே உள்ளாடை மட்டும் அணிந்தபடி, கையில் துப்பாக்கியுடனும் புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளனர்.
அப்புகைப்படங்களை முகப்புத்தக பக்கங்களிலும் அந்த பெண்கள் சமீபத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் உலா வந்ததால், இஸ்ரேல் ராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு குறித்து சர்வதேச ஊடகங்கள் பட்டிமன்றம் நடத்த தொடங்கின.
இதனையடுத்து, அந்த ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட 5 பெண்களும் துறை ரீதியாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர். எந்த வகையான தண்டனை

 

ஆசிரியைகளை மட்டுமே நியமிக்க வேண்டும்:

பெண்கள் பள்ளிகளில் செக்ஸ் தொந்தரவுகளை தடுக்கும் வகையில் பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதலே இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து மே 28-ந் தேதி தமிழக அரசாணை 145-ல் புதிதாக பணி நியமனம் மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளையே நியமிக்க வேண்டும், தலைமை ஆசிரியைகளும் பெண்களாகவே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த உத்தரவையே பின்பற்றி அரசு ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசின் இந்த உத்தரவு சமீபத்தில் நடந்த கவுன்சிலிங்கின்போது கடைசி நாளில் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த கவுன்சிலிங்கின்போதும் அமுல்படுத்தப்படும். மேலும் பதவி உயர்வு, புதிய ஆசிரியர்கள் நியமனம், டிரான்ஸ்பர் ஆகியவற்றில் இந்த உத்தரவு பின்பற்றப்படும் என்றார்.
அரசின் இந்த உத்தரவுக்கு ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பும், வரவேற்பும் உள்ளது. பள்ளிகளில் செக்ஸ் புகார்களை தடுக்கும் வகையில் அரசின் இந்த உத்தரவு வரவேற்க கூடியது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்

02 June 2013

செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து



ராஜஸ்தானி்ல் இளம் பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகேயுள்ள பையா என்ற கிராமத்தை சேர்ந்தவர் கிரிபரம்.
இவரது மகளுக்கு, அதே ஊரைச் சேர்ந்த, சவாய் ராம் என்ற இளைஞரை, திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கான, நிச்சயதார்த்தமும் நடந்தது.
ஆனால், சவாய் ராம் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்பது கிரிபரமுக்கு தெரியவந்தது. இதையடுத்து சவாய் ராமை, மருமகனாக ஏற்க மறுத்த அவர், வேறு ஒரு இளைஞருடன், தன் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சவாய் ராமின் பெற்றோர், கிராம பஞ்சாயத்தில் புகார் செய்தனர். பஞ்சாயத்தை சேர்ந்த பெரியவர்கள், கிரிபரமை அழைத்து, ஏற்கனவே நிச்சயித்தபடி, சவாய் ராமைத் தான், உங்கள் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். மறுத்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்தனர்.
ஆனால் கிரிபரம் தன் நிலையில் உறுதியாக இருந்தார். இதையடுத்து பஞ்சாயத்தார் ஆலோசனை நடத்தினர். இதில் பஞ்சாயத்து முடிவை ஏற்க மறுத்த, கிரிபரம், அவரது மனைவி, மகள் ஆகியோருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி மூன்று பேருக்கும், செருப்பு மாலை அணிவித்து, தெருவில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இச்சம்பவம் ராஜஸ்தானில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

பொலிஸ் பாதுகாப்புடன் இன்று சவானுக்கு திருமணம்


 ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அங்கீத் சவானின் திருமணம், பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் இடைத்தரகர்கள் மேலும் சில கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரை மும்பை பொலிசார் கடந்த மாதம் கைது செய்தனர்.
இவர்கள் அங்கீத் சவான், தனக்கு திருமணம் நடைபெற இருப்பதால் ஜாமினில் விடுவிக்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் 6ஆம் திகதி வரை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் மும்பை தாதர் பகுதியில் நடைபெறும் எளிய விழாவில் மணமகள் நெஹா சம்பரியை அங்கீத் சவான் இன்று திருமணம் செய்து கொள்கிறார்.
இந்த திருமண விழாவில் பங்கேற்க வரும் முக்கிய பிரமுகர்களை கண்காணிக்கும் பணியில் சீருடை அணியாத சிறப்பு பொலிசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.