Search This Blog n

18 September 2012

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏமாற்றிய விவகாரம்! இலங்கைக்கு பதிலடி கொடுக்க திட்டம்

 
 
18.09.2012.By.Rajah.இலங்கை அரசாங்கம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏமாற்றிய விவகாரத்துக்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
வடபகுதிக்கு பயணம் மேற்கொள்வதற்கு சிறப்பு உலங்குவானூர்தியை வழங்க இலங்கை அரசாங்கம் கடைசி நேரத்தில் மறுத்த விவகாரம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சீற்றம் கொள்ள வைத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அவர்கள் இலங்கைக்கு எதிராக பிரச்சினை எழுப்பவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரித்தானிய மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறப்பு உலங்குவானூர்தி மூலம் வடபகுதிக்கு அழைத்துச் செல்ல கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
அதேவேளை, கொமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வடபகுதிக்கு அழைத்துச் செல்ல இலங்கை அரசும் ஏற்பாடு செய்திருந்தது.
இந்தநிலையில், பிரித்தானியா தனியான பயணத்துக்கு ஏற்பாடு செய்தது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இருந்தபோதிலும், இலங்கையின் எந்த இடத்துக்கும் எவரும் செல்வதை தடுக்கப் போவதில்லை என்று கூறி இலங்கை பாதுகாப்பு அமைச்சு அதற்கு அனுமதி கொடுத்தது.
இந்தநிலையில், வடபகுதிக்குச் செல்வதற்காக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரத்மலானை விமான நிலையத்துக்குச் சென்றபோது, அங்கு அவர்களின் பயணத்துக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உலங்குவானூர்தியைக் காணவில்லை.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலி ருவர்ஸ் நிறுவனத்தின் உலங்குவானூர்தியையே பிரித்தானியத் தூதரகம் இந்தப் பயணத்துக்காக ஒழுங்கு செய்திருந்தது.
கிளிநொச்சியில் பிரித்தானியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களை அவர்கள் பார்வையிடவிருந்தனர்.
இந்தநிலையில், அவர்களின் பயணத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உலங்குவானூர்தி வேறு பயணத் தேவைக்கு பயன்படுத்தப்படுவதாக இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையடுத்து, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தமது ஏற்பாட்டில் வடக்கிற்கு மேற்கொள்ளும் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு இலங்கை அரசதரப்பினால் கேட்கப்பட்ட போதும், அவர்கள் அதற்கு இணங்கவில்லை.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமான பயணத்தைத் தடுப்பதற்கே, உலங்குவானூர்தியை வழங்க இலங்கை அரசாங்கம் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய,
கொமன்வெல்த் நாடாளுமன்றக் குழுவின் 122 உறுப்பினர்களின் பயணங்களுக்கான பொறுப்பை ஹெலி ருவர்ஸ் நிறுவனமே ஏற்றிருந்தது.
அவர்களை யாழ்ப்பாணம், சிகிரியா, கொக்கல அகிய இடங்களுக்கு ஏற்றிச் செல்ல வேண்டியிருந்தது.
இலங்கை அரசின் அதிகாரபூர்வ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணங்களுக்காக எமது முழுவளங்களையும் பயன்படுத்தினோம்.
இதனால், துரதிஸ்டவசமாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு தனிப்பட்ட உலங்குவானூர்தியை அவர்களுக்கு வழங்க முடியாது போனது.” என்று கூறியுள்ளார்.
இந்தநிலையிலேயே இலங்கை அரசாங்கம் தம்மை நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டதாக கோபம் கொண்டுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் நாடு திரும்பியதும் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்

0 கருத்துகள்:

Post a Comment