Search This Blog n

21 January 2014

டாய்லெட் இருக்கு ஆனா இல்லை! இது பள்ளியின் கணக்கு

சேலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டிடம் கட்டப்படாமலேயே, கட்டியதாக கணக்கு காட்டியது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் அழகாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், அழகாபுரம், ரெட்டியூர், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
2010-11ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில், நான்கு கழிப்பறை, "யூனிட்' அமைக்க, தலா, 35,000 ரூபாய் வீதம், 1.40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒரு கழிப்பறை, "யூனிட்'டில் இரண்டு டாய்லெட் ரூம், ஒரு யூரின் பிளாக் அமைக்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடுத்த ஆண்டே கட்டி முடிக்கப்பட்டது என்ற அறிக்கை வழங்கப்பட்டது.
இந்நிலையில் இப்பள்ளியில் கல்வி இயக்க அலுவலர்கள் ஆய்வுக்கு சென்ற போது, ஒரு கழிப்பறை யூனிட் கூட முழுமையாக கட்டப்படாமல் இரண்டு டாய்லெட் ரூம் மட்டுமே கட்டப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது தலைமை ஆசிரியராக இருந்து, இக்கட்டிடத்தை கட்டிய திலகம், தற்போது சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலராக இருந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கட்டிடம் கட்ட இடமில்லாததால், கட்டப்படவில்லை எனவும் மீதமுள்ள பணத்தை திருப்பித்தர தயாராக இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.

ஆனால், உண்மையில் அதற்கு பின் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில் நான்கு கழிப்பறை யூனிட் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கட்டிட நிதியை முறைகேடு செய்யும் நோக்கிலேயே, கட்டிடம் கட்டப்படாமலேயே கட்டியதாக அறிக்கை கொடுக்கப்பட்டது எனவும் தற்போது வகையாக சிக்கிக்கொண்டதால், பணத்தை திருப்பித்தர முன்வந்துள்ளதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திட்ட நிதியில், கட்டி முடிக்கப்பட்டதாக அறிக்கை அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் திட்ட நிதியை திரும்ப பெற முடியாது என்பதால், கழிப்பறை கட்டிடம் கட்டியே தீர வேண்டும் என அலுவலர்கள் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கழிப்பறை கட்டிடம் கட்டினாலும், முன்பு ஒதுக்கப்பட்ட நிதியை விடவும், அதிக நிதி தேவைப்படும்.

ஆனாலும், சங்ககிரி மாவட்டக்கல்வி அலுவலராக உள்ள முன்னாள் தலைமை ஆசிரியரை காப்பாற்றும் வகையில், தற்போது கழிப்பறை கட்டிடம் கட்ட, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனாலும் கட்டி முடிக்கப்பட்டதாக தவறான தகவல் அளித்த, முன்னாள் தலைமை ஆசிரியர், தற்போது மாவட்டக்கல்வி அலுவலராக இருப்பதால், அவற்றை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment