Search This Blog n

13 January 2014

இளைஞர்கள் மத வெறிக்கு எதிராக போராட வேண்டும் -

ஆன்மிகம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்ற எழுச்சிமிக்க இந்தியர் சுவாமி விவேகானந்தர். மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான இன்றைய கொல்கத்தாவில், 1863-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி விசுவநாத தத்தா, புவனேஸ்வரி தம்பதியரின் மகனாக பிறந்த சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் நடந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சுவாமி விவேகானந்தரின் போதனைகளுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கான அவரது எழுச்சிமிக்க உரைகளுக்கு புகழாரம் சூட்டினார். அப்போது அவர் கூறியதாவது;
   
மதவெறி இன்றைக்கு இந்தப் பிராந்தியத்திலும், பல நாடுகளிலும் அமைதிக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அப்படிப்பட்ட தருணத்தில், சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் பலம் வாய்ந்தவை. அவரது எண்ணங்கள் நமது புதிய தலைமுறை இளைஞர்களின் இதயங்களுக்கும், மனங்களுக்கும் எடுத்துச் செல்லப்படவேண்டும். அவர்கள்தான் மதவெறிக்கு எதிராக போராட வேண்டும். விவேகானந்தரின் போதனைகள் முக்கியமாக சமூக நல்லிணக்கத்தையும், அமைதியையும் வலியுறுத்தின. சுவாமியின் போதனைகள் நாம் குறுகிய மனம் படைத்தவர்களுக்கும், சுய நல சக்திகளுக்கும் இரையாகி விடக்கூடாது என கூறுகின்றன. இளைய தலைமுறையினரை தட்டி எழுப்புவதாக அவரது உரைகள் அமைந்தன.

உலகமெங்கும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் நமது தேசத்தில் மட்டும்தான் இளைஞர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. 21-ம் நூற்றாண்டு இந்தியா, இளைஞர்களின் சமூகமாக இருக்கிறது. இந்த இளைஞர் பட்டாளத்தின் எதிர்பார்ப்புக்கள், ஆசைகள் உயர்வாக இருக்கின்றன. அவர்கள் சிறப்பான கல்வி அறிவு பெற வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்கள் நல்லமுறையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களது விருப்பங்களை நிறைவேற்றக்கூடியதாக அவர்களது வேலைவாய்ப்புக்கள் அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். நாம் அவர்களை தவற விடக்கூடாது. நாம் அவர்களை தவற விட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டு பேசினார். அவர் தனது பேச்சில், "சுவாமி விவேகானந்தர் வலியுறுத்திய உயர்வான போதனைகளை நாம் நமது இதயத்தில்

ஏற்றிக்கொள்ளாமல், அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவதோ, அவருடைய சிந்தனைகளுக்கு, போதனைகளுக்கு மரியாதை செலுத்துவதோ, அவரது நினைவைப் போற்றுவதோ பலன் தராது" என குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், "உண்மையான மதம் என்பது வெறுப்புணர்வு, பிரிவினைவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்காது. அது பரஸ்பர மரியாதை, அனைத்து தரப்பினரிடத்தும் சகிப்புத்தன்மை, அனைவரின் இறைநம்பிக்கையையும் ஏற்றுக்கொள்வதாகும்" என குறிப்பிட்டார்.
 

0 கருத்துகள்:

Post a Comment