Search This Blog n

04 May 2015

நிலநடுக்கத்தால் பலியானோர் 7,040 ஆக உயர்வு..

நேபாள நிவாரணத்துக்காக தனது ஒரு மாத ஊதியமான ரூ. 1 லட்சத்தை, நிதீஷ் குமார் வியாழக்கிழமை வழங்கியது குறிப்பிடத்தக்கது.???
 நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 7,040-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் தேசியப் பேரிடர் மேலாண்மைப் பிரிவு அலுவலக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 
(மே 2) நிலவரப்படி 7,040-ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோரின் எண்ணிக்கை 14,100-ஆக உள்ளது.
நில அதிர்வு: கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு பின் அதிர்வுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோர்க்கா மாவட்டத்தின் பார்பக் கிராமத்தில் 5.1 ரிக்டர் அளவில் சனிக்கிழமை காலை நில அதிர்வு ஏற்பட்டது. இந்த அதிர்வால், அப்பகுதியில் நிலச்சரிவு
 ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.
வீடுகள் தரைமட்டம்: இதனிடையே, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நிலநடுக்கத்தால் 90 சதவீத வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாக நேபாளத்தின் சிந்துபால்செளக் மாவட்டத்தில் உள்ள செளதாரா மாநகராட்சியில் இருந்து திரும்பிய எங்கள் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
அங்கு மருத்துவமனை சேதமடைந்துள்ளது. தங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் அப்பகுதி மக்கள் இடிபாடுகளில் தேடி வருகின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
19 இந்தியர்கள் பலி: நேபாள நிலநடுக்கத்தில், 19 இந்தியர்கள் பலியாகி உள்ளதாக, காத்மாண்டில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் அபய் குமார் தெரிவித்தார். ஆனால், நிலநடுக்கத்தில் 38 இந்தியர்கள் உள்பட 54 வெளிநாட்டவர்கள் பலியாகி உள்ளதாக அந்நாட்டு போலீஸார் கூறினர்.
வெளிநாட்டவரின் கதி என்ன? இந்நிலையில், மலையேற்றத்துக்காக நேபாளம் சென்றிருந்த 1,000-த்துக்கும் மேற்பட்ட ஐரோப்பியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
"மலையேற்றத்துக்காக சென்ற டச்சு, இஸ்ரேல், கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்
 இமயமலைப் பகுதிகளில் சிக்கி உள்ளனர். அவர்களை விமானங்கள் மூலம் மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
விமானம் செல்லாத பகுதிகளுக்கு ஹெலிகாப்டரை அனுப்ப உள்ளோம்' என்று தனியார் விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் உதவி: நேபாளத்துக்கு கூடாரங்கள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை 2 ராணுவ விமானங்களில் பாகிஸ்தான் சனிக்கிழமை அனுப்பியது.
பிகார் அமைச்சர்கள் நிவாரணம்: நிலநடுக்க நிவாரண நிதி வழங்குமாறு பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தனிநபர்கள் ஆகியோர் "முதல்வர் நிவாரண நிதி'க்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
மாநில சாலைகள் கட்டுமானத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், சுங்கம், கனிம வளத் துறை அமைச்சர் ராம் லக்கன் ராம் ரமண் ஆகியோர் தலா ரூ.1.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வரிடம்
 சனிக்கிழமை வழங்கினர்.
பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் செளதரி, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் சதானந்த சிங்,
 காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் நிவாரண நிதி வழங்கினர்.
கடந்த 2 நாள்களில் நிவாரண நிதி ரூ. 2 கோடியைத் தாண்டியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment