Search This Blog n

27 December 2013

குஜராத் கலவர வழக்கு: மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி

குஜராத் கலவரம் தொடர்பாக அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு எதிராக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குஜராத் கலவரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி.யின் மனைவி தாக்கல் செய்த மனுவை ஆமதாபாத் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக மேல்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு மிகப்பெரும் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தின்போது குல்பர்க் என்னுமிடத்தில், காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி. இஸான் ஜாஃப்ரி உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட 63 பேர் மீது கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.பி. இஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து ஜாகியா ஜாஃப்ரி புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ஆர்.கே. ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுப் படையை (எஸ்.ஐ.டி.) உச்சநீதிமன்றம் அமைத்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுப் படை தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் 2011ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. அதனையடுத்து அந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை ஆமதாபாத் பெருநகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி, சிறப்புப் புலனாய்வுப் படைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ஏற்று, ஆமதாபாத் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புப் புலனாய்வுப் படை அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், மோடி உள்பட குற்றம்சாட்டப்பட்ட யாருக்கும் அச்சம்பவத்தில் தொடர்பில்லை என்றும், எனவே விசாரணையை முடித்துக் கொள்வதாகவும் சிறப்புப் புலனாய்வுப் படை தெரிவித்திருந்தது.

இதனை எதிர்த்து ஜாகியா ஜாஃப்ரி, ஆமதாபாத் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 5 மாதங்களாக நடைபெற்ற இந்த மனுவின் மீதான விசாரணை முடிவடைந்து, வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பை வாசித்த நீதிபதி பி.ஜே. கனத்ரா, ஜாகியாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக மேல் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்றும் நீதிபதி அனுமதி அளித்தார்.

மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாகியா ஜாஃப்ரியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததை அறிந்ததும், அவர் கதறி அழுதார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு மாதத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய சிறப்புப் புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி.) வழக்கறிஞர் ஆர்.எஸ். ஜாமுர்,
"சிறப்புப் புலனாய்வுப் படையின் விசாரணை அறிக்கை இதுவரை ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்ததற்கு, ஜாகியா ஜாஃப்ரியின் மனுதான் தடையாக இருந்ததாகவும், தற்போது அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும்" கூறினார்.

ஆமதாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறப்புப் புலனாய்வுப் படை தலைவர் ராகவன், தனது குழுவினர் நடத்திய விசாரணை உண்மை என்று நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும், தங்களது கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதுவதாகவும் ராகவன் தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவரம் தொடர்பாக ஆமதாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நரேந்திர மோடி, உண்மை வென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்

 

0 கருத்துகள்:

Post a Comment