Search This Blog n

24 December 2014

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குள் இழுத்து சென்று பாலியல் கொடுமை

ஓசூர் பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குள் ராஜஸ்தான் பெண்களை பிடித்துச்சென்று பாலியல் கொடுமை செய்ததாக போலீஸ்காரருக்கு எதிரான குற்றச்சாட்டை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய தலைவி உ.வாசுகி, தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–

பாலியல் கொடுமை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் 8–ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 4 பெண்கள் 2 சிறுமிகளுடன் காத்திருந்தனர். அப்போது, ஓசூர் போலீஸ் நிலைய ஏட்டு வடிவேலு, அந்த பெண்களில் சிலரை புறநகர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று பணத்தை பறித்து, அவர்களை பாலியல் கொடுமையும் செய்துள்ளார். இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானதும், ஏட்டு வடிவேலுவை போலீசார் பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.
பெண்கள் எங்கே?

இந்த சம்பவம் பத்திரிகைகளில் செய்தியாக வெளியானதும், எங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சம்பவ இடங்களில் விசாரணை நடத்தியபோது, பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், பாலியல் கொடுமை செய்த போலீஸ்காரர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றும் தெரியவந்தது.
தற்போது, பாதிக்கப்பட்ட பெண்கள் எங்கு உள்ளனர் என்றே தெரியவில்லை. எனவே, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யவும், அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்.
இழப்பீடு

இந்த வழக்கு விசாரணையை தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாக்கப்பு ஆணையம் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட இளம் பெண் உட்பட 5 பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கடந்த 8–ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் உ.நிர்மலாராணி ஆஜராகி வாதிட்டார்.
சப்–கலெக்டர் விசாரணை

அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, போலீஸ்காரர் மீதான குற்றச்சாட்டு என்பதால், இதுகுறித்து போலீசார் விசாரிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து சப்–கலெக்டர் விசாரணைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதன்படி சப்–கலெக்டரும் விசாரணை நடத்தி முடித்து, அறிக்கையை கலெக்டரிடம் தாக்கல் செய்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்க்கா மாவட்டத்தில் உள்ளனர். அவர்களது செல்போன் நம்பர்கள் போலீசாரிடம் உள்ளது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
விசாரணை அறிக்கை

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

போலீஸ்காரர் வடிவேலுவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து சப்–கலெக்டர் நடத்திய விசாரணையின் அறிக்கை எங்கள் முன்பு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த போலீஸ்காரர் மீதான வேறு சில குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை கட்டாய ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் அரசு தரப்பில் எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

தகுந்த நடவடிக்கை
மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான போலீஸ்காரரை கைது செய்யவில்லை என்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து சப்–கலெக்டர் விசாரணை நடத்துவதால், வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றும் அவ்வாறு செய்தால், அது ஒரு குற்றச்சாட்டுக்கு இரண்டு விதமான விசாரணை நடத்துவதாகி விடும் என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், தற்போது சப்–கலெக்டர் விசாரணை முடிந்து விட்டதால், இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். மேலும், போலீஸ்காரருக்கு எதிராக குற்றச்சாட்டு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம்.
கைது செய்யலாம்

இந்த வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு குறையாத அதிகாரியை விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டிஜிபி நியமிக்க வேண்டும். புலன் விசாரணையின்போது, தேவைப்பட்டால் குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ்கார் வடிவேலுவை விசாரணை அதிகாரி கைது செய்து, விசாரித்து அதன் அறிக்கையை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த சப்–கலெக்டரின் அறிக்கையை, அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் வழங்கவேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த சூழ்நிலையில் எவ்வளவு இழப்பீடு வழங்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது என்பது குறித்து விபரத்தை அரசு பிளீடர் கேட்டு இந்த கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும்.
பதில் இல்லை
இந்த வழக்கில் 2 சிறுமிகள், 2 பெண்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குள் ஏன் அழைத்து செல்லப்பட்டனர் என்ற எங்களுடைய (நீதிபதிகளுடைய) கேள்விக்கு அரசு தரப்பில் இதுவரை சரியான பதிலை தெரிவிக்கவில்லை. எனவே, இந்த வழக்கை வருகிற ஜனவரி 6–ந்தேதிக்கு தள்ளிவைக்கின்றோம். அன்று, இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்யவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment