Search This Blog n

24 March 2015

இன்று மீனவர்கள் அனைவரும் விடுதலை..

அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 
கடந்த 21 ஆம்  திகதி இரவு அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் குறித்த 21 பேரும் கைது செய்யப்பட்டு 22 ஆம் திகதி யாழ். மாவட்ட நீரியல் வளத்திணைக்களத்திடம்  கையளிக்கப்பட்டிருந்தனர்.

அன்றைய தினமே ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஏப்ரல் 2ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். எனினும்  இந்திய , இலங்கை மீனவர்களின்  பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என்ற நல்லெண்ண நோக்கத்தில் சட்டமா அதிபர் திணைக்களம்  கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய இன்றைய தினம்  குறித்த 21 மீனவர்களும்  ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில்  நீதவான் லெனின்குமார் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 21 ஆம் திகதி மன்னார் கடற்பரப்பிலும்  கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களும்  இன்று விடுதலை செய்யப்பட்டு அனைவரும் நாளை நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment