Search This Blog n

03 September 2013

முதுநிலை அறிவியல் 13 வயதில் படிக்கும் சிறுமி



உத்தரபிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் முதுநிலை அறிவியல் படிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.

லக்னோ நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பகதூர் வர்மா. இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
பகதூரின் கடைசி மகள் சுஷ்மா(13). சிறு வயதிலேயே அறிவுக் கூர்மையுடன் காணப்பட்டார்.

2000ம் ஆண்டில் பிறந்த சுஷ்மா, தன் இரண்டரை வயதில், லக்னோவில் நடைபெற்ற, ராமாயணம் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
சிறு வயதில், கடினமான ராமாயணத்தை மனப்பாடம் செய்து ஒப்பித்த சுஷ்மா தன் 5 வது வயதில் 10ம் வகுப்பு பாடங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்தார்.

எனினும் 5 வயதில், நேரடியாக 10ம் வகுப்பில் சேர அனுமதி கிடைக்காததால் 2005 - 06 ல் 9 ம் வகுப்பில் சேர்ந்தார்.
2006 - 07ல் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று நாட்டிலேயே மிகக் குறைந்த வயதில் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவி என்ற பெருமையை பெற்றார்.

அதன் பின் 2009 - 10 ம் ஆண்டு பிளஸ்2 தேர்வில் வெற்றி பெற்று தனது 10 வது வயதில் லக்னோ பல்கலை அனுமதியுடன் பி.எஸ்சி., விலங்கியல் மற்றும் உயிரியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தார்.

இந்த ஆண்டு யூனில் வெளியான பி.எஸ்சி. பட்டத் தேர்வு முடிவுகளில் 66 சதவீத மதிப்பெண்களைப் பெற்று பட்டப் படிப்பை நிறைவு செய்தார்.
இதன் பின் லக்னோ பல்கலையில், எம்.எஸ்சி., மைக்ரோ பயாலஜி படிப்பில் சேர விண்ணப்பித்தார்.

இதிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் நாட்டிலேயே 13 வயதில் முதுநிலை அறிவியல் பட்டம் படிக்கும் முதல் மாணவி என்ற பெருமையை சுஷ்மா பெற்றுள்ளார்.

பல்கலையில் இடம் கிடைத்தும், குடும்பச் சூழல் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் சுஷ்மா தவிக்கிறார்.
இந்த தகவல் அறிந்த பலரும், சுஷ்மாவுக்கு உதவ முன்வந்துள்ளனர். பிரபல பாடலாசிரியர், ஜாவித் அக்தர், சுஷ்மாவின் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை அனுப்பும்படி பல்கலை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
சுஷ்மாவின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

Post a Comment