Search This Blog n

25 October 2014

பாலியல் பலாத்கார சம்பவம்: விதிகளை மீறி பள்ளிக்கூடம் நடத்திய நிர்வாகி கைது

 வயது மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக அந்த பள்ளி வாகன டிரைவர்களிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அதோடு விதிகளை மீறி பள்ளிக்கூடம் நடத்திய நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
4 வயது மாணவி பலாத்காரம்
பெங்களூர் ஜாலஹள்ளி கிராஸ், தும்கூர் மெயின் ரோட்டில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் 4 வயது மாணவி கடந்த 21–ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதனை கண்டித்து கடந்த 3 நாட்களாக அந்த தனியார் பள்ளி முன்பு பெற்றோர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக ஜாலஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பள்ளிக்கூடத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தார்கள். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்த 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்களில் பள்ளி ஊழியரான குண்டன்னா மேல் மட்டும் போலீசாருக்கு பலத்த சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, அவரை பிடித்து துருவி, துருவி விசாரித்து வருகிறார்கள். ஆனால் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.
டிரைவர்களிடம் விசாரணை
இதற்கிடையில், அந்த பள்ளிக்கூடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பஸ்சுக்குள் சிறுமியை யாரோ அழைத்து செல்வது போன்ற காட்சிகள் காமிராவில் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, பள்ளியில் பணியாற்றும் பஸ், வேன் டிரைவர்களிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பள்ளி ஊழியர் குண்டன்னா உள்பட மற்ற டிரைவர்களின் புகைப்படங்களும் சிறுமி காண்பிக்கப்பட்டதாகவும், ஆனால் சிறுமி யாரையும் அடையாளம் காட்டவிலை என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று காலையில் சம்பவம் நடந்த தனியார் பள்ளிக்கூடத்திற்கு சட்டம்–ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார், துணை கமிஷனர் சுரேஷ் ஆகியோர் நேரில் சென்றார்கள். பள்ளிக்கூடம் முழுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தகவல்களை சேகரித்தார்கள். பின்னர் சட்டம்–ஒழுங்கு கூடுதல் கமிஷனர் அலோக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
சாட்சிகள் திரட்ட வேண்டும்
“சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எல்லா கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பள்ளி ஊழியர்கள், டிரைவர்களிடம் விசாரித்து வருகிறோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 வயது தான் ஆகிறது. இதனால் சிறுமியிடம் அடிக்கடி விசாரணை நடத்த முடியவில்லை. இது ஒரு பதற்றமான வழக்கு ஆகும்.
அதனால் சரியான தகவல்கள், சாட்சிகள், பலமான ஆதாரங்கள் திரட்ட வேண்டிய அவசியம் உள்ளது. அப்போது தான் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்து கொள்ள முடியும். சிறுமி பலாத்கார வழக்கில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் குற்றவாளியை கைது செய்வோம்.“இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி நிர்வாகி கைது
கர்நாடக பொது அறிவுரை கமிஷனர் மொகமது மொசின், விதிமுறையை மீறி செயல்பட்டு வரும் அந்த தனியார் பள்ளி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் சிபாரிசு செய்திருந்தார். அதன்பேரில் நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகம் மீது கிரிமினல் வழக்கு, போக்சோ சட்டப்பிரிவுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், விதிமுறையை மீறி பள்ளிக்கூடம் நடத்தி வந்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மஞ்சுநாத் என்பவர் ஜாலஹள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரிலும், கல்வித்துறை அதிகாரியின் சிபாரிசு பேரிலும் அந்த பள்ளியின் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், இணை செயலாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் பள்ளியின் செயலாளரான கே.ஆர்.கே.ரெட்டி என்பவரை ஜாலஹள்ளி போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியின் தலைவர் உள்பட 3 பேரையும் கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பள்ளி நிர்வாகத்தின் முறைகேடுகள்
கர்நாடக பொது அறிவுரை கமிஷனர் மொகமது மொசின் பள்ளி நிர்வாகம் செய்துள்ள முறைகேடுகள் குறித்து கூறியதாவது–
“பள்ளிக்கூட நிர்வாகம் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 34, 418, 420(மோசடி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கல்வி உரிமைச்சட்டம் பிரிவு 18(5)–ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது உரிய அனுமதி பெறாமல் பள்ளிக்கூடம் நடத்தினால் இந்த பிரிவின் கீழ் அந்த பள்ளிக்கூடத்தை செயல்படாமல் நிறுத்தி வைக்கலாம். மேலும் அந்த பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கலாம். அதோடு விதிமுறைகள் நீடிக்கும் ஒவ்வொரு நாளைக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கலாம்.
இந்த பள்ளி நிர்வாகம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு அங்கீகாரம் பெற்று இருப்பதாக பொதுமக்களை ஏமாற்றி இருக்கிறது. இப்படி செய்ததின் மூலம் ஏராளமான மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடி இருக்கிறது. சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் இல்லாமலேயே சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பாடங்களை நடத்தி இருக்கிறார்கள். 5–ம் வகுப்பு வரை கன்னட வழியில் பாடம் நடத்த மட்டுமே இந்த பள்ளி நிர்வாகம் அனுமதி பெற்று உள்ளது. ஆனால் 7–ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பாடம் நடத்தி உள்ளனர். அதோடு உரிய அனுமதி இல்லாமல் நர்சரி பள்ளியையும் நடத்தி இருக்கிறார்கள்.இவ்வாறு கர்நாடக பொது அறிவுரை கமிஷனர் மொகமது மொசின் கூறினார்.
  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment