Search This Blog n

02 July 2013

மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்


 
மத்திய அரசின் இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கைக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
   மத்திய அரசின் ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரையே உள்ளதால், இயற்கை எரிவாயுவுக்கு விலையை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு தார்மிக உரிமை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
  இது குறித்து முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
  இதையடுத்து, சர்வதேச தர நிர்ணய அமைப்புகள் இந்திய பொருளாதார மதிப்பீட்டை குறைத்துவிடும் என்ற அச்சத்திலும் பங்குச் சந்தை வீழ்ச்சியாலும், அவசர கதியில் எடுக்கப்படும் புதிய கொள்கை முடிவுகளை, சீர்திருத்தங்கள் என்று சொல்லப்படும் பொருளாதார சீர்கேட்டுக் கொள்கைகளை மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அண்மைக் காலமாக எடுத்து வருகிறது.
  இயற்கை எரிவாயு விலை உயர்வு: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இயற்கை எரிவாயுவின் விலையை நிர்ணயம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு, கொள்கை அடிப்படையில் உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கடைப்பிடிப்பதற்கு ஊக்கம் அளித்தது. அதன் அடிப்படையில் இன்றைக்கு இந்தியாவில் யூரியா தயாரிக்கும் உர நிறுவனங்களின் உற்பத்தித் திறனில் 81 சதவீதம் இயற்கை எரிவாயுவையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
  போதிய அளவு இயற்கை எரிவாயு கிடைக்காத காரணத்தால் அகில இந்திய அளவில் 28 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. இயற்கை எரிவாயு விலை அதிகரிக்கும்போது இந்த மின் உற்பத்தி நிலையங்களும், யூரியா தயாரிக்கும் நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தியை முடக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும்.
  இல்லையெனில், யூரியா போன்ற உரம் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரம் ஆகியவற்றின் விலை கணிசமாக உயர வழிவகுக்கும்.
  உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவுக்கும் இதுபோன்ற செயற்கையான விலை நிர்ணயம் செய்வதை யாராலும் ஏற்றுக் கொள்ள இயலாது. முழுவதும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவுக்கு உற்பத்தி செய்யப்படும் விலையை மட்டும் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
  இயற்கை எரிவாயு விலை ரூபாய் மதிப்பில்தான் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமேயன்றி, அமெரிக்க டாலர் மதிப்பில் நிர்ணயம் செய்யப்படக் கூடாது.
  தார்மிக அதிகாரம் கிடையாது: மத்திய அரசு இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அடுத்த ஆண்டு மே மாதம் வரையே மக்களால் ஆட்சிப் பொறுப்பை பெற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் விலை நிர்ணயம் செய்ய எந்தவித தார்மிக அதிகாரமும் கிடையாது.
  எனவே, அடுத்தாண்டு மத்தியில் அமையப் பெறும் புதிய அரசு இதை நிர்ணயம் செய்வதே சரியாகும். மத்திய அரசு விடாப்பிடியாக இந்த இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை திரும்பப் பெறாவிட்டால் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பின் மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் நிலையை அடையும் எனது தலைமையிலான அதிமுக, இந்தக் கொள்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்

 

0 கருத்துகள்:

Post a Comment