Search This Blog n

26 August 2013

முதல்வர் ஜெயலலிதா ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத்தை அறிவித்தார்


உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து ஆட்டோக்களின் புதிய கட்டணத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் மட்டும் 71,470 ஆட்டோக்கள் ஓடுகின்றன. 1996,க்கு பிறகு கடந்த 2007 ஜனவரியில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வையடுத்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 ஆகவும் அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.15 எனவும் கட்டணம் நிர்ணயிக்க தொழிற்சங்கங்கள் கோரின.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிய ஆட்டோ கட்டணத்தை ஒகஸ்ட் 26ம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கடந்த 10ம் திகதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போக்குவரத்து துறை ஆணையர் பிரபாகர ராவ், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்பட 9 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உச்சநீதிமன்ற கெடு நாளை முடியவுள்ள நிலையில், சென்னையில் ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத்தை அறிவித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக கடந்த 22ம் திகதி எனது தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் மேற்கொள்ளப்பட்ட விவாதத்துக்கு பிறகு பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் அல்லது உரிமையாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் பயன் அடையும் வகையில் புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரம்:
முதல் 1.8 கி.மீ. தூரத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 அதற்குமேல் ஒவ்வொரு கி.மீட்டருக்கு கட்டணம் ரூ.12 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோக்களில் பயணிப்போர் கூடுதலாக 50 சதவீதம் இரவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
காத்திருப்பு கட்டணம், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ரூ.3.50 காசு என்ற வீதத்தில், ஒரு மணி நேரத்துக்கு ரூ.42 நிர்ணயம் செய்யப்படும்.
இந்த திருத்திய கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வரும்.
இதன் அடிப்படையில் பயணிகளிடம் இருந்து கட்டணத்தை வசூலிக்க வேண்டும். திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகித அட்டையை வரும் 15ம் திகதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது வட்டார போக்குவரத்து அலுவலகத்தினால் நடத்தப்படும் சிறப்பு முகாம் மையத்தில் இருந்து ஆட்டோ ஒட்டுனர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அக்டோபர் 15ம் திகதி வரை அவகாசம் வழங்கப்படும்.
இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு இடத்தை காட்டும் கருவியுடன், எலக்ட்ரானிக் டிஜிட்டல் பிரின்டருடன் கூடிய மீட்டர் இலவசமாக அரசு செலவில் பொருத்தப்படும்.
இதற்காக ரூ.80 கோடி செலவாகும். இதன் மூலம் பயணித்த தூரம் மற்றும் அதற்கான கட்டணம் அடங்கிய ரசீது பயணிகளுக்கு வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், பயணிகளிடம் இருந்து சரியான கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
மேலும், ஆட்டோக்களின் இயக்கங்களை கண்காணிக்கவும் வழிவகை ஏற்படும். ஆட்டோவில் பயணிப்போருக்கு ஏதேனும் ஆபத்து நேரும் சூழ்நிலை உருவானால், ஆட்டோ மீட்டருடன் பொருத்தப்பட்டுள்ள அபாய பொத்தானை பயணிகள் அழுத்தலாம்.
இதன்மூலம், பயணிகள் ஆபத்தில் இருப்பது கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வரும். அதன் அடிப்படையில் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பர்.
ஆட்டோக்களின் இயக்கங்களை போக்குவரத்து துறையும், காவல்துறையும் தீவிரமாக கண்காணிக்கும்.
இந்த கண்காணிப்பின் போது மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்துக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் லைசன்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படும்.
ஆட்டோ பறிமுதல் செய்யப்படுவதோடு, அதன் பர்மிட் ரத்து செய்யப்படும். ஆட்டோவில் பயணிப்போர் புகார் அளிக்க ஏதுவாக, பொதுவான புகார் எண் உருவாக்கப்பட்டு, அந்த தொலைபேசி எண் ஒவ்வொரு ஆட்டோவிலும் பிரதானமாக எழுதப்படும்.
இந்த நடவடிக்கையின் மூலம், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்
 

0 கருத்துகள்:

Post a Comment